Home நாடு “பழனிவேல் தன்னை கடவுளாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” – சாமிவேலு அறிவுரை

“பழனிவேல் தன்னை கடவுளாக நினைத்துக் கொள்ள வேண்டாம்” – சாமிவேலு அறிவுரை

535
0
SHARE
Ad

?????????????????????????கோலாலம்பூர், ஜனவரி 27 – “கட்சியில் உள்ள அனைவருக்கும் பழனிவேல், மதிப்பளிக்க வேண்டும். அதை விடுத்து கடவுள் போல் நடந்து கொள்ளக் கூடாது” என்று மஇகா முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு கருத்துத் தெரிவித்துள்ளார்.

“தான் அனுமதி அளிக்காத கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என்று கூறும் பழனிவேல், தன்னுடைய செயல்களின் விளைவுகள் என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை” என்றும் சாமிவேலு தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற நேபாள் முதலீட்டு உச்சி மாநாடு 2015-ல் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த சாமிவேலு,“கட்சியின் தலைவர் அனுமதியின்றி எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளும் உரிமை மாநிலத் தலைவர்களுக்கு உள்ளது. மஇகா தலைவர் என்பவர் ஒரு சாதாரண மனிதன் தான். கடவுள் அல்ல” என்று பழனிவேலின் நடவடிக்கைகளுக்கு சாமிவேலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “நான் பதவியில் இருந்த போது, எனக்கு எதிராகவும் பல கூட்டங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில், நான் அவர்களை அழைத்து அவர்களின் பிரச்சனைகள் என்னவென்பதை கலந்தாலோசித்து தீர்த்து வைத்ததோடு நட்பு பாராட்டினேன்” என்றும் சாமிவேலு குறிப்பிட்டுள்ளார்.

Palanivel-and-MICமஇகா-வின் நடப்பு தலைவர் கட்சியிலுள்ள எல்லோரையும் மதிக்க வேண்டும் என்றும் சாமிவேலு வலியுறுத்தியுள்ளார்.

“நான் 29 வருடங்கள் மஇகா-வில் இருந்தேன். எல்லோருக்கும் மதிப்பளித்தேன். அதை தான் நடப்பு தலைவரும் செய்ய வேண்டும். அவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க வேண்டும்.அப்போது தான் இரு தரப்பிலும் சுமூகத் தீர்வு கிடைக்கும்.”

“இத்தனை வருடங்களாக பாதுகாத்து வந்த கட்சியின் இன்றைய நிலையைக் கண்டு அஞ்சுகின்றேன். யாரும் கட்சியைப் பாதுகாக்க நினைக்கவில்லை. மாறாக தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவே முயற்சி செய்கிறார்கள். கட்சித் தலைவர் உடனடியாக கட்சியைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கின்றேன்” என்று சாமிவேலு கூறியுள்ளார்.

கட்சியை வலுப்படுத்தவும், பிரச்சனைகளைத் தீர்க்கவும் அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சாமிவேலு அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், குமார் அம்மானின் உண்ணாவிரதம் குறித்து கருத்துரைத்த சாமிவேலு,“மஇகா-விற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மீண்டும் அரசியலுக்கு வரப்போவதாக தன்னைப் பற்றி கூறப்படும் வதந்திகளை மறுத்த சாமிவேலு, “எனக்கு 79 வயதாகி விட்டது. இனி அரசியலுக்கு வரப்போவதில்லை. இளைஞர்கள் கட்சியை வழி நடத்தட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆர்ஓஎஸ் விவகாரம் குறித்து கலந்தாலோசிக்க, கடந்த சனிக்கிழமை (ஜனவரி 24) மஇகா தேசிய துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்று பழனிவேல் நேற்று அறிவித்ததோடு, அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.