கோலாலம்பூர், ஜனவரி 30 – மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
“இன்று காலை பிரதமர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என வலியுறுத்தினார். தேசிய முன்னணியின் தலைவர் என்ற முறையில் மஇகா பிரச்சினையை தீர்க்க முன்வந்துள்ள அவரது அறிவுறுத்தலை நாங்கள் மதிக்கிறோம்,” என்று செய்தியாளர்களிடம் டத்தோ சுப்ரமணியம் தெரிவித்தார்.
செய்தியாளர்களுடனான இச்சந்திப்பின் போது அவருடன் மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன், மத்திய செயலவை உறுப்பினர் பி.கமலநாதன், இளைஞர் பிரிவு தலைவர் சிவராஜா மற்றும் மகளிர் பிரிவு தலைவர் மோகனா ஆகியோர் உடன் இருந்தனர்.
மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகளை பிரதமர் சரியான முறையில் எடை போட்டுப் பார்த்து நல்ல தீர்வு காண்பார் என்று குறிப்பிட்ட டாக்டர் சுப்ரமணியம், கட்சியின் அடித்தட்டு உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதமர் செவிமெடுப்பார் என நம்புவதாகத் தெரிவித்தார்.
பிரதமருடனான சந்திப்பு எப்போது நிகழும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,
அதற்கு பதிலளித்த டாக்டர் எஸ்.சுப்ரமணியம், கூடிய விரைவில் இச்சந்திப்பு நிகழும் என்றார்.