‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தை இயக்கிய சேரன், இப்படத்தை ‘சிடூஎச்’ திட்டத்தின் மூலம் முதல் வெளியீட்டு படமாக வெளியிட திட்டமிட்டிருந்தார் சேரன்.
இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்படுவதாக நேற்று சேரன் அறிவித்தார்.
மேலும், திரைப்படத் துறையின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெற்று ‘சிடூஎச்’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளார். இது குறித்து சேரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
“சினிமா டூ ஹோம்’ திட்டத்திற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆதரவு தெரி வித்துள்ளனர். பல ஆண்டுகளாக படங்களை திரையிட முடியாத தயாரிப்பாளர்கள் எங்களுடன் சேர்த்து படத்தை வெளியிடவும் தயாராகி வருகிறார்கள்”.
“தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு கிடைக்கும்போது ‘சினிமா டூ ஹோம்’ திட்டத்தில் பல பெரிய படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் இந்த திட்டத்தில் பணியாற்றும் விநியோகஸ்தர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும்”.
“எனவே, தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனைப்படி திட்டத்தை பதினைந்து நாட்கள் தள்ளி வைத்திருக்கிறோம். வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் திரைத்துறையினர் கலந்து கொள்ளும் பெரிய விழாவாக நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என சேரன் தெரிவித்தார்.