எச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவி உள்ளது.
இந்நோய்க்கு நாடு முழுவதும் 22,240 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று (3-ஆம் தேதி) வரை 1,198 பேர் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 292 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 286 பேரும், மராட்டியத்தில் 170 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 168 பேரும் பலியாகியுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பாக முன்னர் விளக்கம் அளித்த மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, “பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கத்தை கண்டறிவதற்காக நாடு முழுவதும் 21 ஆய்வகங்கள் உள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை போதாது. அனைத்து மாநிலங்களிலும் இதற்கான தனி ஆய்வகங்களை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.”
“முகமூடி அணிவது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்வது உள்ளிட்ட தனிநபர் சுகாதாரமும் மிகவும் அவசியமானது. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்திருந்தார்.”