Home இந்தியா ஸ்மிர்தி இரானி உடை மாற்றும் அறையில் கேமரா: கடை மேலாளர் உள்பட 4 பேர் கைது!

ஸ்மிர்தி இரானி உடை மாற்றும் அறையில் கேமரா: கடை மேலாளர் உள்பட 4 பேர் கைது!

548
0
SHARE
Ad

smriti_Irani_journalists_interaction_PTI_650கோவா, ஏப்ரல் 4 – கோவாவில் உள்ள ஒரு ஜவுளி கடையில், உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிர்தி இரானி விடுமுறையில் தனது கணவர் சுபின் இரானியுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ என்ற ஜவுளி கடைக்கு உடைகள் வாங்க சென்றார்.

சில உடைகளை வாங்கிய அவர் அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு (டிரையல் ரூம்) சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர் கோவாவில் உள்ள பாரதீய ஜனதா தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான மைக்கேல் லோபோவுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். லோபோ சிறிது நேரத்தில் போலீசாருடன் அந்த கடைக்கு வந்தார். இது தொடர்பாக போலீசில் லோபோ ஒரு புகாரும் கொடுத்தார்.

போலீசார் அந்த அறையை ஆய்வு செய்து அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினார்கள்.

அந்த கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தியது தெரியவந்தது. போலீசார் கடை ஊழியர் மற்றும் மேலாளர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த கடைக்கு சீல் வைத்து கடை முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி தெரிவித்த தகவல்கள் சாட்சி வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடை மேலாளர் உள்பட 4 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இதுதொடர்பாக கோவா முழுவதும் உள்ள ஜவுளி கடைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் கூறினார். கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

‘‘நான் இப்போது பெங்களூரில் இருக்கிறேன். மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி பற்றிய தகவல் கிடைத்தது. குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் நான் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்’’ என்றார்.

இந்த ஜவுளி கடையில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது இது முதல்முறை அல்ல என்றும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் விழிப்புடன் செயல்பட்டதால் இந்த ஆபத்தில் இருந்து அவர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.