கோலாலம்பூர், ஏப்ரல் 7 – கடந்த மார்ச் மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், கூகுள் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தர் பிச்சை, தங்கள் நிறுவனம் வரும் மாதங்களில் ‘செல்பேசி வலையமைப்பு’ (Cellular Network) திட்டம் ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். பலவேறு நிறுவனங்களுக்கு இந்த அறிவிப்பு ஆச்சரியம் அளித்த நிலையில், செல்லுலார் நிறுவனங்கள் பலவற்றிற்கு அதிர்ச்சியையும் அளித்து இருக்கும்.
இந்நிலையில், அந்நிறுவனங்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை கூகுள் அறிவிக்க உள்ளது. அதுதான் இலவச ‘ரோமிங்’ (Roaming) கட்டணம். இதற்காக ஹாங்காங் நிறுவனமான ‘ஹட்சசன் வாம்போ’ (Hutchison Whampoa) உள்ளிட்ட பல்வேறு செல்பேசி வலையமைப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கூகுள், தனது செல்லுலார் வலையமைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டால் ரோமிங் கட்டணத்தை இலவசமாக்க முடிவு செய்துள்ளது.
ஹட்சசன் வாம்போ நிறுவனத்துடன் கூகுள் பேச்சுவார்த்தை நடத்த முக்கியக் காரணம், அந்நிறுவனம் ஹாங்காங் மட்டுமல்லாது இந்தோனேசியா, இலங்கை, வியட்நாம், டென்மார்க் போன்ற நாடுகளிலும் செல்பேசி வலையமைப்பு சேவைகளை செய்து வருகின்றது. அதன் காரணமாகவே கூகுள் அந்நிறுவனத்துடன் வர்த்தக உறவை மேம்படுத்த விரும்புகிறது.
#TamilSchoolmychoice
ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே ரோமிங் கட்டணத்தை 2018-ம் ஆண்டிற்குள் ரத்து செய்ய முடிவு செய்துள்ள நிலையில், ஐரோப்பா மட்டுமல்லாது மேலும் 15 நாடுகளுக்கு இலவச ரோமிங்கை கொண்டுவரும் கூகுளின் இந்த முயற்சி, பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று நம்பப்படுகிறது.