இந்திய சினிமா உலகில் சிறந்த பங்களிப்புக்காக மத்திய அரசால் உயரிய விருதான ‘தாதாசாகேப் பால்வே’ விருது வழங்கப்பட்டு வருகிறது.
பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூருக்கு இந்த விருதை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இவர் புகழ்பெற்ற நடிகர்களான ராஜ்கபூர், சமி கபூர் ஆகியோரின் இளைய சகோதரர் ஆவார்.
ஆக், அவாரா, தரம்புத்ரா, ஜப் ஜப் போல் லே, உத்சவ், திரிசூல், நமக் ஹலால் உள்ளிட்ட திரைப்படங்கள் சசிகபூருக்கு புகழை தேடிக்கொடுத்தன.
ஆனால் 77 வயதான சசிகபூர் உடல்நலக்குறைவால் டெல்லி சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு விருது பெற முடியவில்லை.
இதைத் தொடர்ந்து மும்பைக்கு நேரில் வந்து அவருக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருதை வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சசிகபூருக்கு விருது வழங்கும் விழா நேற்று மும்பையில் உள்ள பிரித்வி திரையரங்கில் நடந்தது.
விருது பெறுவதற்காக சசிகபூர் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு நடந்த விழாவில் அவருக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய நிதி அமைச்சரும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சருமான அருண் ஜெட்லி வழங்கினார்.
சசிகபூருக்கு சால்வை அணிவித்து ‘தாதாசாகேப் பால்கே’ விருதுக்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் காசோலையை அவர் வழங்கினார். இதைத் தொடர்ந்து அருண் ஜெட்லி பேசியதாவது:-
“தாதாசாகேப் பால்கே விருதை இதற்கு முன்பு சசிகபூரின் தந்தை பிரித்விராஜ் கபூர், மூத்த சகோதரர் ராஜ்கபூர் ஆகியோரும் பெற்றனர்”.
“இதனால் தற்போது சசிகபூரின் குடும்பத்தில் 3-வது நபர் இந்த விருதை பெற்று உள்ளார். இதன் மூலம் சசிகபூரின் குடும்பத்தினர் தங்களது கலை திறமையை நிரூபித்து உள்ளனர்”.
விருது பெற்ற சசிகபூர் உடல் நலம் தேறவும், அவர் நீண்ட ஆயுளுடன் வாழவும் வாழ்த்துகிறேன் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். விழாவில் நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன்,
ரன்பீர் கபூர், ரிஷி கபூர், நடிகைகள் ரேகா, ஹேமமாலினி, சபானா ஆஸ்மி, பின்னணி பாடகி ஆஷா போஸ்லே, சசிகபூரின் மகன் குணால் கபூர் உள்பட இந்தி திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.