Home தொழில் நுட்பம் செய்திகளை இனி நேரடியாக பேஸ்புக்கில் பிரசுரிக்கலாம்!

செய்திகளை இனி நேரடியாக பேஸ்புக்கில் பிரசுரிக்கலாம்!

522
0
SHARE
Ad

instant articleகோலாலம்பூர், மே 14 – பேஸ்புக் நிறுவனம் தொடர்பாக நீண்ட கால ஆருடமாக கூறப்பட்ட தகவல் ஒன்று என்னவென்றால், பேஸ்புக் நிறுவனம் செய்தி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செய்திகளை நேரடியாக பேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்க இருப்பது தான். இந்த ஆருடங்களை பேஸ்புக் நிறுவனம், நேற்று மெய்ப்பித்துள்ளது.

‘இன்ஸ்டன்ட் ஆர்ட்டிகில்ஸ்’ (Instant Articles) என்ற சேவை ஒன்றை நேற்று தொடங்கி உள்ள பேஸ்புக் நிறுவனம், ‘டைம்ஸ்’ (Times), ‘நேஷனல் ஜாக்கிரபிக்’ (National Geographic), தி கார்டியன் (The Guardian), ‘பிபிசி’ (BBC) போன்ற செய்தி நிறுவனங்களுடன் இணைந்து செய்திகளை நேரடியாக பிரசுரிக்க இருக்கின்றது. இந்த நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களில் எத்தகைய செய்திகளை வெளியிடுகின்றனவோ, அதனை அப்படியே பேஸ்புக் தளத்தில் வெளியிடலாம்.

பொதுவாக பேஸ்புக் தளத்தில் செய்தி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் வெளியிட்ட செய்திகளை பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளும். இந்த வசதி கணினி பயன்பாட்டாளர்களுக்கு பயனுள்ளவையாக இருந்தாலும், திறன்பேசிகள் மூலம் செய்திகளை வாசிக்கும் பயனர்களுக்கு சற்று அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்த பகிர்வுகளை திறன்பேசிகளில் திறக்க, குறைந்தது 8 நொடிகளாவது காத்திருக்க வேண்டும். இணையமோ அல்லது வைஃபையோ மெதுவாக வேலை செய்தால், அந்த பகிர்வுகளை திறப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும்.

இந்த குறைகளை போக்கவே பேஸ்புக் நிறுவனம், இந்த சேவையை தொடங்கி உள்ளது. இத்தகைய மாற்றம் ஊடகத்துறை, தொழில்நுட்பத்தை நோக்கி தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கின் இந்த சேவை வெற்றிகரமாக அமைந்தால், விரைவில் ஆப்பிள் வாட்ச் போன்ற அடுத்தகட்ட தொழில்நுட்ப கருவிகளுக்கும் மேம்படுத்தப்படலாம்.