சிட்னி, மே 14 – பாலி நைன் வழக்கில், இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய வாழ் இலங்கைத் தமிழர் மயூரன் சுகுமாரனின் இறுதிச் சடங்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் சிட்னி நகரில் நடைபெற்றது.
பல்வேறு நாடுகள் போதைப்பொருள் குற்றங்களை ஒழிக்க பல்வேறு கடுமையான சட்டங்களை இயற்றி உள்ளன. பல நாடுகள் இந்த குற்றத்திற்காக சிறை தண்டனை வழங்கினாலும், இந்தோனேசியா போன்ற நாடுகள் எந்தவித கருணையின் அடிப்படையிலும் குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக மரண தண்டனை விதிக்கிறன. அப்படி ஒரு வழக்கில் சிக்கி உயிரிழந்தவர் தான் மயூரன் சுகுமாரன்.
இறுதி சடங்கின் போது மயூரன் சுகுமாரன் இந்தோனேசிய சிறையில் கழித்த 10 வருட காலங்கள் திரையில் காணொளியாவும், படங்களாகவும் திரையிடப்பட்டது.அதேபோல், இறுதி நாட்களில் அவர் வரைந்த ஓவியங்கள் காட்சி படுத்தப்பட்டன. இந்த இறுதிச் சடங்கில் அவருடன் கொல்லப்பட்ட மற்றொரு ஆஸ்திரேலியரான ஆண்ட்ரு சானின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆண்ட்ரு சானின் இறுதிச் சடங்கு, அதற்கு முதல் நாள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
#TamilSchoolmychoice
மயூரன் சுகுமாரன் மற்றும் ஆண்ட்ரு சான் இறப்பு குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் கூறுகையில், “அவர்களின் இறப்பு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. வாழ்வதற்கு வழி இருந்தும் அவர்கள் மரணத்தை அடைந்து இருக்கிறார்கள். ஆயிரம் காரணங்கள் கூறினாலும் இந்தோனேசியா-ஆஸ்திரேலியா உறவில் அது ஒரு கருப்பு நாள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.