Home தொழில் நுட்பம் பிரெய்லி தொழில்நுட்பத்திற்காக இந்திய சிறுவனுடன் கைகோர்க்கும் மைக்ரோசாப்ட்!

பிரெய்லி தொழில்நுட்பத்திற்காக இந்திய சிறுவனுடன் கைகோர்க்கும் மைக்ரோசாப்ட்!

446
0
SHARE
Ad

shubham-banerjeeகோலாலம்பூர், மே 16 – எளிய பிரெய்லி தொழில்நுட்பத்தை விண்டோஸ் இயங்குதளத்தில் மேம்படுத்த 13-வயது இந்திய வம்சாவளி சிறுவனுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க மாணவர் சுபம் பானர்ஜி, கலிஃபோர்னியாவில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அவர் பார்வையற்றோருக்காக உருவாக்கிய ‘ப்ரைகோ 2.0’ (Braigo 2.0) எனும் எளிய பிரெய்லி அச்சுக் கருவியை காட்சிப்படுத்தவே அந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும், தாங்கள் உருவாக்கி வரும் விண்டோஸ் தளம் பார்வையற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என நினைத்த மைக்ரோசாப்ட், பிரெய்லி தொழில்நுட்பத்தை விண்டோஸில் மேம்படுத்த சுபம் பானர்ஜி தங்களுடன் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்தது. அவரும் அதனை எற்றுக் கொண்டு மைக்ரோசாப்ட்டுடன் பணியாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

இது குறித்து சுபம் பானர்ஜி வலைப்பதிவு ஒன்றில் கூறியதாவது:-

“மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான பிரெய்லி அச்சுக்கருவி 2000 டாலர்கள் வரை இருந்தது என்னை யோசிக்க வைத்தது. அதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் தான் ப்ரைகோ 2.0. இதன் மூலம் 500 டாலர்களுக்கு எளிய பிரெய்லி அச்சுக்கருவியை உருவாக்க முடியும். தற்போது மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து அந்த தொழில்நுட்பத்தை விண்டோஸில் மேம்படுத்தி வருகிறேன்.”

“இதனை வரும் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தகத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் வெற்றி பெற்றால், பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் விண்டோஸ் தளத்தில் மிக எளிதாக தங்கள் பிரெய்லி அச்சுக்களை பிரதி எடுத்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார்.