சராசரியாக ஒரு வாரத்துக்கு சுமார் ஒன்றரை கிலோ தக்காளியைத் தமது உணவில் சேர்த்து கொள்ளும் ஆண்களுக்கு ‘புராஸ்டேட்’ புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 சதவீதம் குறைவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
உலக அளவில் ஆண்களுக்கு ஏற்படும் இரண்டாவது பெரிய புற்றுநோயாக, ‘புராஸ்டேட்’ சுரப்பியில் காணப்படுகிறது. பிரிட்டனில் மட்டும் ஆண்டுக்கு 35 ஆயிரம் ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அவர்களில் 10 ஆயிரம் பேர் இந்த நோய் காரணமாக இறந்து போகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டுமானால் உணவில் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதோடு, இறைச்சியின் அளவையும் கொழுப்பு மற்றும் உப்பின் அளவையும் குறைக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் பரிந்துரையாக இருந்து வருகிறது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆண்களிடம் ‘புராஸ்டேட்’ புற்றுநோய் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 50 முதல் 69 வயது வரையானதாக இருந்தது.
அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு தங்களின் மொத்த உணவில் குறைந்தது 500 கிராம் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும், சாப்பிட்டவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் 24 சதவீதம் அளவுக்குக் குறைவதையும் இவர்கள் கண்டறிந்தனர்.
எனவே ஆண்கள், கணிசமான தக்காளியையும், மாவுப்பொருளில் இருந்து தயாராகும் உணவுகள் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளைக் கூடுதலாகத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தங்களுக்கு புராஸ்டேட் புற்றநோய் வருவதைக் கணிசமான அளவுக்குக் கட்டுபடுத்த முடியும் என்றும் இந்த ஆய்வாளர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.