Home இந்தியா தமிழக முதல்வராகப் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா!

தமிழக முதல்வராகப் பணிகளைத் தொடங்கினார் ஜெயலலிதா!

538
0
SHARE
Ad

சென்னை, மே 25 – நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை தினம் என்றாலும், தமிழக முதல்வராக சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதா, நேற்று தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகம் சென்று முதல்வராகத் தனது பணிகளைத் தொடக்கினார்.

jayalalitha-new-photo-600

இதையடுத்து அவர், ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மதுவிலக்கு தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக பிற்பகல் 3 மணியளவில் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள், அதிகாரிகள் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவர்களை நோக்கி புன்னகைத்தபடி தனது அறைக்குச் சென்ற ஜெயலலிதா, தலைமைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கான சிறப்புத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கான வீட்டு வசதித் திட்டம்,  மகளிரை குடும்பத் தலைவராகக் கொண்ட நலிவுற்ற குடும்பங்களுக்கான சிறப்புத் திட்டம் உள்ளிட்ட 5 கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து காணொளி வசதி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் சென்னையில் 45 மற்றும் இதர மாவட்டங்களில் 156 என மொத்தம் 201 அம்மா உணவகங்களையும், 5 அம்மா மருந்தகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களும் நேற்று தங்களின்  அலுவலகங்களுக்குச் சென்று பொறுப்புகளை ஏற்றுக் கொண்டனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக பரபரப்பின்றி காணப்பட்ட தலைமைச் செயலகம் விடுமுறை தினமான நேற்று வழக்கத்தைவிட கூடுதல் பரபரப்புடன் காணப்பட்டது.
எனினும் மது விலக்கு தொடர்பான கோப்பில் அவர் கையெழுத்திடாததும், அது தொடர்பான அறிவிப்பு வெளியாகாததும் மது விலக்குக்காக போராடி வருவோருக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.