சென்னை,மே 25 – கமலின் உதவியாளர் ராஜேஷ் இயக்கத்தில்,கமல்ஹாசனே தயாரிக்கும் ‘தூங்காவனம்’ படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.மன்மதன் அம்பு படத்திற்குப் பிறகு, திரிஷா கமலுடன் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும்,வசூல்ராஜாவுக்குப் பிறகு பிரகாஷ்ராஜ் கமலுடன் இணையும் இரண்டாவது படமும் இதுவாகும்.
படத்தின் முதல் பார்வையே அசத்தலாக இருக்கிறது. காதல்(romance) மற்றும் வீரம் (action) என இருவிதக் கலவையைச் சுவரொட்டிகளில் வெளிப்படுத்தி அசத்தியுள்ளார் கமல். சுவரொட்டியின் ஒருபகுதியில் நாயகியை இறுக அணைத்து முத்தமிடுவது போலவும், மறுபகுதியில் கோபாவேசமாக இருப்பது போலவும் இரு வேறுபட்ட உணர்ச்சிகளைக் காட்டி ரசிகர்களைக் கவரும் விதத்தில் சுவரொட்டியை வடிவமைத்துள்ளது வித்தியாசமாக இருக்கிறது.
தூங்காவனம் படத்தின் படப்பிடிப்புத் துவக்க விழாவில் கமலஹாசன் பங்கேற்றுப் பேசியதாவது:- “தூங்கா வனம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடிப் படமாகத் தயாராகிறது. உத்தமவில்லன் பட விழாவுக்காக ஹைதராபாத் வந்த போது நிறைய பேர் நேரடித் தெலுங்குப் படத்தில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டனர். விரைவில் நடிப்பேன் என்று பதில் அளித்தேன். தூங்கா வனம் படம் மூலம் அதை நிறைவேற்றுகிறேன். ஏழு ஆண்டுகள் என் சிஷ்யனாக சினிமாப் பயணத்தில் உடன் இருந்த ராஜேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.ராஜேசுக்கு நான் தான் குரு; எனக்குக் குரு பாலச்சந்தர். உத்தமவில்லன் படத்தில் நடித்து விட்டு மரணம் அடைந்து விட்டார். எனது நடிப்பு, கோபம் எல்லாமே பாலச்சந்தரிடம் இருந்து வந்தவை. படங்கள் எப்படி வெற்றி பெறுகிறது எப்படி தோல்வி அடைகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஷோலே படம் வெளியான போது கப்பார் சிங் கேரக்டர் பேசப்பட்டது. ஆனால் படத்தின் வெற்றிக்கு அந்த கேரக்டர்தான் காரணம் என்று சொல்ல முடியாது.தூங்கா வனம் படம் விறுவிறுப்பான கதையம்சம் உள்ள படமாக இருக்கும்.இரண்டு மணி நேரம் எப்படி போனது என்று தெரியாத அளவுக்குப் படத்தைப் பார்த்து விட்டு ரசிகர்கள் வெளியே வருவார்கள்.” இவ்வாறு கமல் பேசினார்.
திரிஷா கூறும் போது:- “இந்தப் படத்தில் எனக்கு வித்தியாசமான கேரக்டர் அமைந்துள்ளது. கமலுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.பிரகாஷ்ராஜ் பேசும் போது: “கமல் ஒரு மகாநதி. அந்த மகாநதி தெலுங்கு ரசிகர்களையும் தொட்டுக்கொண்டு ஓடப்போகிறது” என்றார்.