Home நாடு மகாதீரின் முறைகேடுகள் குறித்த தகவலுக்கு மில்லியன் பரிசு!

மகாதீரின் முறைகேடுகள் குறித்த தகவலுக்கு மில்லியன் பரிசு!

373
0
SHARE
Ad

Dr-Mahathir-Mohamedகோலாலம்பூர், ஜூன் 1 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு தொடர்புள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஒரு மில்லியன் ரிங்கிட் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஜிஎம் (The Citizens for Accountable Governance Malaysia – CAGM) எனப்படும் அரசு சார்பற்ற இயக்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மகாதீருக்கு சொந்தமான, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்யும் வகையில் தகவல் அளிக்கும் தனி நபர்களுக்கு கனமான வெகுமதிகள் அளிக்கப்படும் என அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

“தனி நபர் ஒருவருக்கு, அவர் அளிக்கும் தகவலின் முக்கியத்துவம் மற்றும் நம்பகத்தன்மைக்கேற்ப ஒரு மில்லியன் வரை பரிசளிக்கப்படும். தனி நபர்கள் அளிக்கும் அத்தகைய ஆதாரங்கள் சட்ட அமலாக்க முகைமைகளிடம் அளிக்கப்பட்டு மறைக்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என அந்த இயக்கத்தின் தலைவர் சைனல் அபிடின் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

தங்களது இயக்கம் சுயமாக ஆய்வொன்றை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதன் வழி வெளிநாடுகளில் மகாதீர் பெரும் சொத்துக்களை வைத்திருப்பது தெரிய வந்ததாகக் கூறியுள்ளார்.

“அபரிமிதமான, ஒருவரை தள்ளாட வைக்கும் சொத்துக்கள் இருப்பதன் காரணமாகவே பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் மகாதீரால் மலேசிய அரசியலில் கிங் மேக்கராக நீடிக்க முடிகிறது எனக் கருத நிறைய வாய்ப்புள்ளது.

“மலேசிய அரசியல் பிரமுகர்கள், குறிப்பாக முன்னாள் பிரதமர்கள் மற்றும் நடப்பு தலைமைத்துவம் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவர அரசு சிறப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும்,” என்றும் சைனல் மேலும் வலியுறுத்தியுள்ளார்.