Home நாடு நஜிப், மகாதீர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும்: கைரி வலியுறுத்து

நஜிப், மகாதீர் நேருக்கு நேர் சந்தித்துப் பேச வேண்டும்: கைரி வலியுறுத்து

435
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 7 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பும் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி, தங்களுக்குள் ஏதும் பிரச்சினை இருப்பின் அதற்குத் தீர்வு காண வேண்டும் என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் (படம்) வலியுறுத்தி உள்ளார்.

khairy

இருவருக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தும் விதமாக மூன்றாம் நபர் யாரும் இல்லாத நிலையில், இருவரும் தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் கைரி கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“டத்தோஸ்ரீ ஷாரிசாட் அப்துல் ஜலில் கூறியிருப்பது போல் பிரதமருக்கும் துன் மகாதீருக்கும் இடையே சமாதானத் தூதுவராகத் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தின் யாசின் செயல்பட வேண்டிய அவசியம் இல்லை எனக் கருதுகிறேன். இந்தப் பிரச்சினையை மூன்றாம் தரப்பால் தீர்த்து வைக்க முடியாது. சம்பந்தப்பட்ட இருவரும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசினால் மட்டுமே பிரச்சினை தீரும்,” என இன்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கைரி தெரிவித்தார்.

முன்னதாக அம்னோ மகளிர் பிரிவு தலைவி ஷாரிசாட்,  இரு தலைவர்களுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மொய்தின் யாசின் முன்னெடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை அன்று புத்ரா ஜெயாவில் நடைபெறவிருந்த அரசு சார்பற்ற இயக்கங்களுடனான பிரதமர் நஜிப்பின் சந்திப்பு குறித்தும் கைரி கருத்துரைத்துள்ளார்.

“அந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள், அதில் பேசப்படும் விவகாரங்களுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆனால் துன் மகாதீருக்கு 1 எம்டிபி விவகாரத்துடன் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை,” என்றார் கைரி.