Home இந்தியா நெஸ்லே பால் மாவு பாதுகாப்பானது தான் – ஆய்வில் முடிவு!

நெஸ்லே பால் மாவு பாதுகாப்பானது தான் – ஆய்வில் முடிவு!

558
0
SHARE
Ad

CW-LT-Nestle-NAN_high_458655053கோவை, ஜூன் 20 – நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் இரசாயனக் கலவையால் ஆய்வில் உள்ள நிலையில், அந்த நிறுவனத்தின் தயாரிப்பான பால் மாவில் புழுகள் நெளிந்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் அந்த நிறுவனப் பால் மாவின் மாதிரிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவை பாதுகாப்பானவை என்றும், உண்ணத்தக்கது என்றும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஏப்ரல் மாதம் வாங்கிய பால் மாவில் புழுக்கள் இருந்ததையடுத்துப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அது உண்ணத்தகுதியற்றது எனவும், புழுக்கள் இருந்ததும் உறுதியானது.

#TamilSchoolmychoice

இதையடுத்து அவர் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து, புகார் அளிக்கப்பட்ட உணவுப் பாக்கெட்களில் உள்ள கணினி குறியீட்டு எண்களைக் கொண்டு, இதே குறியீட்டு எண் வரிசையில் உள்ள மற்ற பால் மாவுகளைச் சோதனை செய்ய உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்நிலையில், சென்னை உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் நெஸ்லே நிறுவனப் பால் பாக்கெட்டுகளின் மாதிரிகளைச் சேகரித்துப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோவை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பரிசோதனையின் முடிவில், அவை பாதுகாப்பானதாகவும், உண்ணத்தக்கதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்த கோவை உணவுப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், புகாரின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அதன் முடிவில், அவை பாதுகாப்பானதாகவும், உண்ணத்தக்கதாகவும் தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.