Home இந்தியா இடைத்தேர்தலுக்குப் பின் சென்னையில் மெட்ரோ தொடர்வண்டி ஓடத் தொடங்கும்- வெங்கையா நாயுடு உறுதி!

இடைத்தேர்தலுக்குப் பின் சென்னையில் மெட்ரோ தொடர்வண்டி ஓடத் தொடங்கும்- வெங்கையா நாயுடு உறுதி!

565
0
SHARE
Ad

Metro-Rail

சென்னை, ஜூன் 22- ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தல் முடிந்தவுடன், சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிச் சேவை தொடங்கி வைக்கப்படும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஓர் ஆண்டுச் சாதனை விளக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:

#TamilSchoolmychoice

“இந்த நிகழ்ச்சி,பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளைப் பொதுமக்கள் முன்பு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகும்.

தொழில் வளர்ச்சி, நிதி வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகியவைதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இல்லை. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்த பின்னர், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 16 அணு உலைகளை உருவாக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு யுரேனியத்தை வழங்கக் கனடாவும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை இந்தியாவில் முதலீடு செய்ய சீனாவும் முன்வந்துள்ளன.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே வேகத்தில் இந்தியா முன்னேறினால், 3 அல்லது 4 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சிவிடும் என்று உலக வங்கியே கருத்துத் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னையில் மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தின் முதல் கட்டப் பணி முடிவடைந்து விட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதால், சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. எனவே, இடைத்தேர்தல் முடிந்ததும், மெட்ரோ தொடர்வண்டிச்  சேவை தொடங்கி வைக்கப்படும். விரைவில் மெட்ரோ தொடர்வண்டி சென்னையில்  ஓடத் தொடங்கும்” என்றார்.