Home நாடு “நான் இந்த சமூகத்திற்கு நல்லது தானே சொல்லியுள்ளேன்” – தயாஜி விளக்கம்

“நான் இந்த சமூகத்திற்கு நல்லது தானே சொல்லியுள்ளேன்” – தயாஜி விளக்கம்

921
0
SHARE
Ad

1381843_10200235295519599_1706781973_nகோலாலம்பூர், நவம்பர் 6 – கடந்த சில நாட்களாக வல்லினம் அகப்பக்கத்தில் வெளிவந்த தயாஜியின் ‘கழிவறையும் பழிவாங்கும் வழிமுறையும்’ என்ற சிறுகதை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கதை ஆபாசம் நிறைந்ததாகவும் தாய்மையையும், கடவுளையும் பழிப்பதாகவும் மேலும், ஓரின சேர்க்கையை வலியுறுத்துவதாகவும்  பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இச்சிறுகதை தொடர்பாக தயாஜி நம்நாடு தமிழ் பத்திரிக்கைக்கு தன்னிலை விளக்கமளித்தார்.

அவர் கூறியுள்ள விளக்கம் பின்வருமாறு:-

“ முதலில் நான் எழுதப்போகும் நாவலுக்கான ஆய்வுக்காக நகரங்களின் இருண்ட பகுதிகளில் சுற்றி அலைந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். இந்த ஆய்வில் போதைப்பித்தர்கள், திருநங்கைகள், மனப்பிறழ்வு கொண்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள், ஓரின சேர்க்கையாளர்கள், குண்டர் கும்பலைச் சார்ந்தவர்கள் என பலரையும் சந்தித்து அவர்கள் வாழ்க்கையின் பின்னணியை ஆராய்ந்தும் வருகிறேன். அவர்களின் அனுபவங்கள் எனக்கு அதிர்ச்சியைத் தருகிறது. முறையற்ற உடலுறவு, தாயைக்கூட போகப் பொருளாகப் பார்த்தவர்கள், கடவுள் சிலை மீது கூட காமம் ஏற்படுகிறது எனச் சொன்னவர்கள் நம் சமூகத்தில் அதிகம். இது தொடர்பான சிறுகதைகளைத் தேடி படிக்கும் போதுதான், சிற்றச்சில் வந்த ஒரு கதையும், இந்தி மொழியில் வந்த மொழிப்பெயர்ப்புக் கதையும் கண்ணில் பட்டது.”

#TamilSchoolmychoice

“அப்போதுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. இந்தச் சிக்கல் நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது என அறிந்துகொண்டேன். மனப்பிறழ்வு கொண்ட ஒருவன் எவ்வாறான கட்டுப்பாடற்ற காம நிலைக்குத் தள்ளப்படுவான் என யோசித்த போது இந்த கதை பிறந்த்து. முதலில் எனக்கு ஏன் அனைவரும் கோபப்படுகின்றனர் எனப் புரியவில்லை. நான் இப்படிக் செய்யலாம் என ஓர் இடத்திலும் கதையில் கூறவில்லை. மாறாக மனப்பிறழ்வு (பைத்தியம்) ஏற்பட்ட ஒருவன் எந்த எல்லைக்கெல்லாம் செல்வான், அவனுக்கு உறவு, ஆண்-பெண், புனிதம் குறித்தெல்லாம் அக்கறை இல்லாததைக் கூறியுள்ளேன். அவன் தன் தவற்றை நினைத்து வருந்துவதாகக் கூறியுள்ளேன். ஒருவன், தவறு செய்வது வேறு, தவறு செய்ததால் வருந்துவது எனக் கூறுவது வேறுதானே.”

“இதுபோன்ற தவறுகளைச் செய்யாதீர்கள். செய்தால் மன உளைச்சல் அடைவீர்கள் என்பது குற்றமா? நான் இந்தச் சமூகத்துக்கு நல்லதைத்தானே சொல்லியுள்ளேன். ஒருவன் திருடக்கூடாது எனக் கூறினால், அவன் திருடும் காட்சியைக் காட்டுவதில்லையா? அப்படிதான் இதுவும், மேலும் நான் முன்பே சொன்னது போல இந்தி மொழியிலும், தமிழிலும் கூட இது போன்ற சிக்கல்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. சமுகத்துக்கு நன்மை என நினைத்துச் செய்யப் போய், அது யாருக்காவது மனதைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.