Home நாடு எம்எச் 370: சிமுலேட்டரில் அழிக்கப்பட்டிருந்த தகவல்கள் மீட்கப்பட்டதா? – விமானி ஸகாரியின் மீது சந்தேகம் வலுக்கிறது!

எம்எச் 370: சிமுலேட்டரில் அழிக்கப்பட்டிருந்த தகவல்கள் மீட்கப்பட்டதா? – விமானி ஸகாரியின் மீது சந்தேகம் வலுக்கிறது!

421
0
SHARE
Ad

Pilot.jpgகோலாலம்பூர், ஜூன் 23 – கடந்த மார்ச் 8 -ம் தேதி,  239 பேருடன் மாயமான எம்எச் 370 விமானம், தனது பாதையை தென் இந்தியப் பெருங்கடலுக்கு வெகு தொலைவிலுள்ள, தீவு ஒன்றிற்கு மாற்றியுள்ளது என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதால், தற்போது அங்கு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் திடுக்கிடும் விஷயம் என்னவென்றால், இந்த தீவிற்கான பாதை ஏற்கனவே தலைமை விமானி ஸகாரி ஷாவின் (படம்) வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சிமுலேட்டர் கருவியில் (மாதிரி விமான அறை) பயிற்சி செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் இந்த சம்பவத்தில் விமானி ஸ்காரி தான், விமானத்தை அதன் வழக்கமான பாதையில் இருந்து திருப்பி, அந்த தீவுக்கு கடத்திக் கொண்டு போயிருக்க வேண்டும் என்று மீண்டும் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

விமானம் மாயமான சில நாட்களிலே ஸ்காரியின் வீட்டை சோதனை செய்த விசாரணை அதிகாரிகள், அவரது வீட்டில் இருந்து சிமுலேட்டர் கருவியை கைப்பற்றினர். அதில் பல தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தன.

அந்த தகவல்கள் மீண்டும் விசாரணை அதிகாரிகளால் மீட்கப்பட்டுவிட்டன என்றும், அதில் விமானி ஸகாரி, தென் இந்தியப் பெருங்கடலில் இருந்து வெகு தொலைவிலுள்ள தீவுக்கு, விமானத்தின் பாதையை மாற்றி பயிற்சி செய்து பார்த்திருப்பதையும் விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக பிரபல ஆங்கில செய்தி நிறுவனமான ‘தி டெலிகிராஃப்’ கூறியுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு தலைமை விமானி மீது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஷாமுடின் மறுப்பு

விமானி ஸ்காரிக்கு  எதிரான இந்த செய்தியை இடைக்கால போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன் நேற்று மறுத்துள்ளார்.

தங்களது பத்திரிக்கை விற்பனைக்காக, அச்செய்தி நிறுவனம் இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் ஹிஷாமுடின் குற்றஞ்சாட்டினார்.

“புதிய புதிய வதந்திகளை இது போன்ற செய்தி நிறுவனங்கள் தினமும் வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. அவர்கள் கூறுவது உண்மையானால், தகுந்த ஆதாரங்களுடன் நம்மை அணுகியிருப்பார்கள். பத்திரிக்கையில் வெளியிடவேண்டிய அவசியம் இல்லை” என குளுவாங்கில் நேற்று நடைபெற்ற முன்னாள் இராணுவ வீரர்களுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் ஹிஷாமுடின் செய்தியாளர்களிடம் கூறினார்.