ஜாகிரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் அவரது உரை மிதமான ஒன்றாகத்தான் இருந்தது என்று கூறினாலும் மற்ற மதத்தினரும் அவ்வாறு கருதவில்லை என்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.
“இதற்குக் காரணம் ஜாகிர் தன்மீது ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் தோற்றம்தான். கடந்த காலத்தில் அவர் எப்படி நடந்து கொண்டார், மற்ற மதங்களைப் பற்றிப் பேசும் போது என்ன கூறினார் என்பதை வைத்துத்தான் இப்போது அவர் எடைபோடப் படுகின்றார்” என்றும் நஸ்ரி மேலும் விளக்கியுள்ளார்.
“இது பேச்சு சுதந்திரம் பற்றிய விவாதம் அல்ல. மாறாக மலேசியர்களாகிய நாம், மலேசியாவுடன் தொடர்பு இல்லாத ஒருவரால் ஏன் தேவையில்லாமல் பிளவுபட வேண்டும்?” என்றும் நஸ்ரி கேள்வி எழுப்பினார்.
“ஜாகிர் தனது உரைகளை நிகழ்த்தி விட்டு நாட்டைவிட்டுப் போய்விடுவார். ஆனால் அவரால் ஏற்படப்போகும் – அவர் விட்டுச் செல்லும் பிரச்சனைகள் அனைத்தும் மலேசியர்களாகிய நம்மிடையே சுமத்தப்பட்டு நம்மிடையே இருந்து வரும்” என்றும் நஸ்ரி தெரிவித்துள்ளார்.