Home Featured நாடு சபாவில் மீண்டும் மூவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

சபாவில் மீண்டும் மூவர் துப்பாக்கி முனையில் கடத்தல்!

770
0
SHARE
Ad

Beaufort Sabah map location

கோத்தா கினபாலு – மிகுந்த பாதுகாப்புகளைக் கொண்ட வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் சபாவின் கிழக்குக் கரைப் பகுதியில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கிக்காரர்கள் துணிச்சலுடன் மீண்டும் சனிக்கிழமை இரவு நுழைந்து மூவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

செம்பூர்ணாவில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான தீவான போம்போம் பகுதியில் மூன்று மீனவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஒருபக்கம், பிலிப்பைன்ஸ் இராணுவம் பயங்கரவாதக் குழுக்களின் தாயகமான ஜோலோ தீவில் அபு சாயாப் இயக்கத்தினரை நோக்கித் தாக்குதல் நடத்தி வரும் வேளையில் இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

முகமூடி அணிந்த ஏழு துப்பாக்கிக்காரர்கள் ஒரு மீன்பிடிப் படகை முற்றுகையிட்டு அதிலிருந்த மூவரைக் கடத்திச் சென்றதோடு, அதற்கு முன்பாக அந்தப் படகிலிருந்த 16 பேரிடம் பணம், செல்பேசிகள் மற்றும் மற்ற பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

சனிக்கிழமை இரவு 10.40 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தின்போது, நங்கூரமிட்டிருந்த அந்த மீன்பிடிப் படகை எம்-16 ரக துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்கள் அணுகியிருக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் எஸ்கோம் எனப்படும் கிழக்கு சபா பாதுகாப்பு மையம் கடத்தல் சம்பவம் குறித்த புகாரைப் பெற்றதாக அதன் படைத் தலைவர் டத்தோ வான் அப்துல் பாரி வான் அப்துல் காலிட் தெரிவித்துள்ளார்.

கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து சபா காவல் துறையும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.