

புத்ரா ஜெயா – 1எம்டிபி மீதான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் அகமட் சைட் அந்நிறுவனம் குறித்து தனது வாக்குமூலத்தை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியிருக்கிறார்.
திரெங்கானு மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாருக்கும் 1எம்டிபி ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என சிலர் கேட்கக் கூடும்.
அகமட் சைட் மாநில மந்திரி பெசாராக இருந்தபோது, 1 மில்லியன் ரிங்கிட் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் திரெங்கானு இன்வெஸ்ட்மெண்ட் அதோரிடி என்ற திரெங்கானு முதலீட்டு ஆணையம் (Terengganu Investment Authority).
அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது 1எம்டிபியின் சர்ச்சைக்குரிய வரலாறும் – கூடவே அதன் பிரச்சனைகளும்!
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் வந்தடைந்த அகமட் சைட் சில மணி நேரங்கள் செலவிட்டு தனது விளக்கங்களை அளித்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
1எம்டிபி விவகாரத்தில் சில அகமட் சைட் ஒத்துழைப்பு வழங்காத காரணத்தால் அவர் 2014-ஆம் ஆண்டில் திரெங்கானு மந்திரி பெசார் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என நம்பப்படுகிறது.
திரெங்கானுவின் எண்ணெய் வள சொத்துகளை 1எம்டிபி அபகரிக்கப் பார்க்கிறது என அகமட் சைட் 3 ஆண்டுகளுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.