சிறுதொழில்களுக்கான வணிகர்களுக்கான மாநாடு ஒன்றில் புதுடில்லியில் கலந்து கொண்ட ஜெப் பெசோஸ் இந்தியாவில் தனது நிறுவனம் பெரிய அளவில் முதலீடு செய்யும் என்று தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் இயங்கும் சிறுதொழில்களை மின்னிலக்கமாக்க (டிஜிடல்) 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை அமேசோன் முதலீடு செய்யும் என்ற இனிப்பான செய்தியையும் அவர் வழங்கினார்.
அமேசோன் இந்தியா என்ற தளத்தை 550,000 விற்பனையாளர்கள், 60,000 இந்திய உற்பத்தியாளர்கள், வணிக முத்திரை (பிராண்ட்) கொண்ட பொருட்களை உருவாக்கும் இந்திய வணிகர்கள் பயன்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள அமேசோன் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்ற தகவலையும் ஜெப் பெசோஸ் வெளியிட்டார். இவர்களுக்கெல்லாம் உதவுவதையே அமேசோன் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
ஏற்கனவே, 5 பில்லியன் டாலர் முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள அமேசோன் கடப்பாடு கொண்டிருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு இணையவழி வணிக நிறுவனங்களிடம் பலத்த போட்டியை எதிர்நோக்குகிறது அமேசோன். குறிப்பாக பிலிப்கார்ட் (Flipkart) அமேசோனுக்குக் கடுமையான போட்டியாளராக இந்தியாவில் திகழ்கிறது.
அமெரிக்காவின் சியாட்டல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமேசோன் இந்தியாவில் 2027-க்குள் இணையவழியான சில்லறை வணிகம் (retail market) 200 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடுகிறது. இந்தியா முழுமைக்குமான சில்லறை வணிகம் தற்போது 670 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
“நாளையே நீங்கள் இறக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வாழுங்கள். எப்போதும் வாழப் போகிறோம் என்பதுபோல் கற்றுக் கொண்டே இருங்கள்” என்ற பொருளிலான காந்தியின் வாசகங்களையும் ஜெப் பெசோஸ் தனது டுவிட்டரில் பதிவிட்டார்.(“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – Mahatma Gandhi)
இந்திய நிகழ்ச்சிகளில் நரேந்திர மோடி பாணியிலான ஆடைகள் அணிந்து ஜெப் பேசோஸ் கலந்து கொண்டார்.