Home உலகம் “வன்முறைகளை நிறுத்துங்கள்” கோத்தபாய வேண்டுகோள்

“வன்முறைகளை நிறுத்துங்கள்” கோத்தபாய வேண்டுகோள்

540
0
SHARE
Ad

கொழும்பு : கொந்தளிப்பில் சிக்கியுள்ள இலங்கை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது டுவிட்டர் பக்கத்தின் வழி அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

வன்முறைகள் மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு அவர் அறிவிப்பின் வழி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் அமைதியாக இருக்குமாறும் பொதுமக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பொருளாதார நெருக்கடிகளுக்கு அரசியலமைப்பின் ஆணையின்படி பொதுவான இணக்கமான உடன்பாடு காணப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மகிந்த பதுங்கியுள்ளார்

ஒரு காலத்தில் இலங்கையின் ஏகபோக அதிகாரமிக்கப் பிரதமராக விளங்கிய மகிந்த ராஜபக்சே திங்கட்கிழமை (மே 9) தனது பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி இலங்கைக் கடற்படைத் தளம் ஒன்றில் பதுங்கியிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை முழுவதும் கடுமையான அளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. மகிந்தவின் சகோதரரும் அதிபருமான கோத்தபாய ராஜபக்சேயும் பதவி விலக வேண்டுமென போராட்டங்களும், நெருக்கடிகளும் நாட்டில் அதிகரித்துள்ளன.

திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார். விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றில் பிரேமதாசா கொல்லப்பட்டவராவார்.

நடப்பு அதிபர் கோத்தாபாய ராஜபக்ச பிரதமர் பதவியை ஏற்குமாறு சஜித் பிரேமதாசாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எனினும் சஜித் இன்னும் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.