புதுடில்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததோடு, இந்தியா மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட டுரோன் என்னும் ஆளில்லா சிறுவிமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
இதனைத் தொடர்ந்து இந்தியா-துருக்கி உறவில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. துருக்கியுடனான வணிக உறவுகளை முறிப்பதாக இந்திய வணிகர்கள் அறிவித்துள்ளனர். துருக்கிக்கான விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலிருந்து சுற்றுப் பயணிகள் அதிக அளவில் செல்லும் நாடுகளில் ஒன்றாகவும் துருக்கி திகழ்ந்து வந்தது. தற்போது துருக்கியைப் புறக்கணியுங்கள் என்ற சுலோகத்துடன் இந்தியர்கள் துருக்கியைத் தவிர்க்குமாறு சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, துருக்கிக்கு சுற்றுப் பயணம் செல்லும் பயணிகளின் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அசர்பைஜானும் எடுத்துள்ளதால், அந்த நாட்டுக்கு எதிராகவும் இந்திய வணிகர்கள் புறக்கணிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
சில இந்தியப் படங்கள் அண்மையக் காலமாக அசர்பைஜானில் படமாக்கப்பட்டு வந்தன. நடிகர் அஜித்குமார் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பெரும்பாலும் அசர்பைஜானில் எடுக்கப்பட்டது. படத்தின் கதையே அங்கு நடப்பது போல் திரைக்கதையும் அமைக்கப்பட்டிருந்தது.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து அசர்பைஜானும் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததால், இனி இந்தியப் படங்கள் அசர்பைஜானில் எடுக்கப்படுவதும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.