Home கலை உலகம் பாகுபலியில் ‘பகடை’ என்ற வசனத்தால் சாதிப் பிரச்சினை: மதன்கார்க்கி விளக்கம்!

பாகுபலியில் ‘பகடை’ என்ற வசனத்தால் சாதிப் பிரச்சினை: மதன்கார்க்கி விளக்கம்!

595
0
SHARE
Ad

madhan karkiசென்னை, ஜூலை 23- “என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது…” என்று ஒரு வசனம் பாகுபலியில் இடம் பெற்றுள்ளது. இதில் வரும் ‘பகடை’ என்ற வசனம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு சாதியினரைக் குறிப்பதாகும்.

இதனால் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் வெகுண்டெழுந்து, தங்களது சாதியை இழிவாகச் சொல்லி வசனம் எழுதப்பட்டிருப்பதாக முழக்கமிட்டுத் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர்.

அந்த வசனம் தற்போது தமிழகத்திந் தென்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அப்படத்துக்குத் தமிழில் வசனம் எழுதிய கவிஞர் மதன் கார்க்கி, அந்த வசனம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“பாகுபலி திரைப்படத்தின் இறுதிக் காட்சி வசனத்தில் இடம்பெற்ற ஒரு வார்த்தை சிலர் மனதைப் புண்படுத்தியதாகவும், அதனால் சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

“என் தாயையும் தாய்நாட்டையும் எந்தப் பகடைக்குப் பிறந்தவனும் தொட முடியாது…” என்று வரும் வசனத்தில், ‘பகடைக்குப் பிறந்தவன்’ என்ற வாக்கியத்தைத் தாயக்கட்டையால் ஆடப்படும் சூதாட்டத்தின் தோல்விக்குப் பிறந்தவன் என்ற பொருளில்தான் எழுதியிருந்தேன். அது ஒரு சமூகத்தின் பெயர் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

சாதிப் பிரிவுகள் வேண்டாம், அனைவரும் சமம் என்று இன்னொரு காட்சியில் பேசும் கதையின் நாயகன், எந்தச் சாதியையும் இழித்துப் பேச மாட்டான். இழிவு செய்வது எங்கள் நோக்கமில்லை.

ஒரு சமூகம் புண்படுவதற்குக் காரணமான அந்தச் சொல்லைப் படத்தில் இருந்து நீக்கிவிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். விரைவில் அந்தச் சொல் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இதில் யார் மனமேனும் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மதன் கார்க்கி கூறியுள்ளார்.