வாஷிங்டன் – நான்கு மலேசியர்களை கடத்திய ஆயுதம் தாங்கிய கடத்தல்காரர்கள் பிணைப் பணத்திற்காக கடத்தியிருக்கின்றார்கள் என்றும் அந்தப் பிணைப் பணத்தை, பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துகின்றார்கள் என்றும் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட் சாஹிட் ஹாமிடி கூறியிருக்கின்றார்.
வோங் தெக் காங் (31), வோங் ஹங் சிங் (34), வோங் தெக் சி (29), ஜோனி லாவ் ஜங் ஹியன் (21) ஆகிய நால்வரும் கடத்தப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கடத்தல்காரர்கள் பிலிப்பைன்சைச் சேர்ந்த முஸ்லீம்கள் என்பது அறியப்பட்டுள்ளதாகவும் சாஹிட் மேலும் கூறியுள்ளார்.
இதுவரையில் பிணைப் பணம் கேட்டு கோரிக்கை எதுவும் வரவில்லை என்றாலும், அவர்களின் கடந்தகால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் கடத்தியவர்களை கூடுதல் தொகைக்கு மற்றொரு பயங்கரவாதக் குழுவிடம் கைமாற்றி விற்று விடுவார்கள் என்றும் சாஹிட் தெரிவித்துள்ளார்.