Home Featured கலையுலகம் இயக்குநர் விஜயசிங்கத்தின் ‘சாணக்கிய சபதம்’ – வரலாற்று நாடகம் (படங்களுடன்)

இயக்குநர் விஜயசிங்கத்தின் ‘சாணக்கிய சபதம்’ – வரலாற்று நாடகம் (படங்களுடன்)

2191
0
SHARE
Ad

Sanakiyan9கோலாலம்பூர் – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா கலை கலாச்சார அறவாரியத்தின் ஏற்பாட்டில், இயக்குநர் விஜயசிங்கத்தின், ‘சாணக்கிய சபதம்’ என்ற வரலாற்று மேடை நாடகம் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, பெட்டாலிங் ஜெயா, சிவிக் மையத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், டத்தோ ப.சகாதேவன், டான்ஸ்ரீ தேவகி கிருஷ்ணன், முன்னாள் துணையமைச்சர் டான்ஸ்ரீ குமரன் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கலை கலாச்சார அறவாரியத்தின் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் தலைமை வகித்தார்.

#TamilSchoolmychoice

பார்வையாளர்களுக்கு நுழைவு இலவசமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

சாணக்கியன் வரலாறு

இரண்டாயிரத்து முன்னூராண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் ஏழை அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர் சாணக்கியன். தன் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்ள வடநாட்டிற்குச் சென்றார். அங்கு தட்சசீலம் வரை சென்று கல்வியறிவை வளர்த்து தட்சசீலம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். மக்களுக்கு நல்லொழுக்கங்களைப் போதித்தார். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவங்களை விளக்கினார். அரசியல் சாசனம் எழுதினார்.

Saanakiyan8சாணக்கியன் ஒரு சிந்தனையாளர், போர்க்குணம் கொண்டவர், எதையும் சாதித்துக் காட்டும் செயல்வீரர், மாபெரும் சாம்ராஜ்யத்தின் அழிவிற்கும், மௌரிய சாம்ராஜ்யத்தின் தொடக்கத்திற்கும் காரணமாக இருந்தவர்.

இத்தகைய பெருமைக்குரிய சாணக்கியனின் வரலாறு இயக்குநர் விஜயசிங்கத்தின் உருவாக்கத்தில், ‘சாணக்கிய சபதம்’ என்ற பெயரில் மலேசியாவில் அரங்கேறியுள்ளது பெருமைக்குரிய விசயமாகும்.

கலைஞர்கள் 

Saanakiyan6இந்த நாடகத்தில் சுமார் 30 -க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றுறுள்ளனர். அதில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் சாணக்கியனாக தினேஷ் சாரதி, சந்திர குப்தனாக அகோந்திரன், தனநந்தனாக பிரேம் ஆனந்த், மகாராணியாக சக்தி தாஸ், துர்தாராவாக கல்பனாஸ்ரீ, ரட்சஷனாக அறிவழகன் ஆகியோர் நடித்திருந்தனர்.

சாணக்கியனாக வந்து தனது திறமையான நடிப்பால் நம்மை மெய்சிலிரிக்க வைத்தார் தினேஷ். அவரது ஆஜானுபாகுவான தோற்றமும், நடையும் உடல்மொழியும் மிகவும் கவர்ந்தது.கோபம், தந்திரம், மகிழ்ச்சி, சூழ்ச்சி, ஆச்சர்யம் என முகத்தில் அத்தனை பாவணைகளையும் மிகவும் அழகாக வெளிப்படுத்துகிறார். அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜகாட்’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saanakiyanசந்திர குப்தனாக வரும் அகோந்திரன் அழகும், இளமையுமாக அந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாகத் தெரிந்தார். தான் மணமுடிக்கப் போகும் இளவரசி துர்தாராவை எண்ணி கனவில் மிதப்பதும், சாணக்கியரின் கட்டளைக்கிணங்கி நடப்பதுமாக தனது நடிப்பால் மிகவும் கவர்கிறார்.

அடுத்ததாக, தனநந்தனாக பிரேம் ஆனந்த்.. அப்பப்பா.. உருட்டி மிரட்டும் கண்களும், மிடுக்கான நடையும், உடையுமாக அவர் அம்மேடையில் தோன்றும் காட்சிகள் அனைத்திலும் அத்தனை பிரமிப்பு. இறுதிக் காட்சியில் தலைவிரிக்கோலமாக வந்து நின்று பெருங்கோபத்துடன் அவர் பார்க்கும் ஒரு பார்வை மிரட்டுகிறது.

Saanakiyan2இளவரசியாக கல்பனாஸ்ரீ.. அழகான முகவெட்டு, ரசிக்க வைக்கும் முகபாவணைகள்.. “ஜோதிடர் வேறு என்ன சொன்னார்?”, “அவர் எப்படி இருப்பாராம்?” “எங்கே என்னை சந்திப்பாராம்?” என தனது தோழியிடம் அவர் ஆச்சரியமாக கேட்கும் காட்சிகளிலும், வெட்கத்தால் நாணும் காட்சிகளிலும் மிகவும் கவர்ந்திழுக்கிறார்.

அவரோடு, மகாராணியாக வரும் சக்தி தாஸ், தனது கணவரின் நிலை கண்டு குமுறி அழும் காட்சியில் அவ்வளவு தத்ரூபமான நடிப்பு. நடிப்பு என்று சொல்வதை விட அக்காட்சியில் உண்மையாகவே அழுகிறாரோ? என்று கூடத் தோன்றியது.

Saanakiyan1அடுத்ததாக, ரட்சஷனாக அறிவழகன்.. அவரது உடையும், தலைப்பாகையும், முறுக்கு மீசையும், தாடியும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகு.

ஒரு காட்சி.. துணை நடிகர்கள் இன்றி அவர் மட்டுமே தனியாக சுமார் 5 நிமிடங்களுக்குப் பேச வேண்டும். உண்மையில் அந்தக் காட்சியில் தனது தனித்துவமான நடிப்பால் அசத்திவிட்டார். வசனங்களை ஏற்ற இறக்கமாகப் பேசி, அதற்கு ஏற்ப கண்ணசைவையும், முகபாவணைகளையும் மாற்றி, தனது உடல்மொழியில் பட்டும் படாமல் நகைச்சுவையையும் சேர்த்து அருமையான நடிப்பு.

Saanakiyan5இவர்களோடு, வீரபாகுவாக சாரதி கிருஷ்ணன், விஸ்வேஸ்வரனாக தங்கமணி, அடிபொடியனாக குணசேகரன், கபிலனாக தியாகராஜன், அலெக்சாண்டராக சுரேஷ், கிராடிராசாக சதிஸ் ராவ், விசித்திரனாக பாலசுப்ரமணியம், வேடவர் தலைவனாக சிவா,  மற்ற கதாப்பாத்திரங்களில் சோதிராஜன், சண்முகநாதன், ஸ்ரீராம், ராஜேஸ், துளசி, நாவா அமுதன், பிரான்சிஸ், ஜோசப் செபாஸ்டின், அம்பாங் சுப்ரா ஆகியோரும் சிறப்பாக நடித்திருந்தனர்.

இசை, நடனம், ஒளி, ஒலி

Saanakiyan3கிரிஷ் ஷர்மா, தியாகு முருகேசுவின் பின்னணி இசையும், பாடலும் இந்நாடகத்திற்குப் பக்க பலமாக அமைந்து காட்சிகளுக்கு ஏற்ப அதன் வீரியத்தைக் கூட்டுவதில் முக்கியப் பங்காற்றியது. அதற்கு நிகராக கந்தாவின் ஒளி, ஒலிப் பதிவு, அசாட் மாஹ்டிசிரின் கலை வடிவமைப்பு ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்தன.

மனீஷெர் சிங்கின் பாடல்  பதிவில், சிவகுரு, ஷர்மிளா சிவகுரு, விஜயன் குமரேஸ், புவனேஸ்வரி ஆகியோரின் குரல் பாடலுக்கு இனிமை சேர்த்திருக்கிறது. அதே வேளையில், எம்.எஸ்.மணியம், அம்பிகா மணியம், வெள்ளையம்மாளின் கைவண்ணத்தில் கலைஞர்களுக்கு ஒப்பணையும், உடை வடிவமைப்பும் கச்சிதமாக அமைந்திருந்தது.

இயக்குநர் உரை

Saanakiyan4நாடகம் குறித்து இயக்குநர் விஜயசிங்கம் உரையாற்றுகையில், இந்த நாடகத்தை இயக்குவதற்குத் தனக்கு வாய்ப்பு வழங்கிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை கலாச்சார அறவாரியம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் தலைவரான டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரத்திற்கும், நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவனுக்கும், இந்த நாடகம் சிறப்பாக அமையக் காரணமாக இருந்த அத்தனை கலைஞர்கள், உதவியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

நாடகத்திற்குத் தலைமையேற்ற தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் பேசுகையில், “நமது நாட்டில் மேடை நாடகங்கள் மறைந்து போகாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தெரிவித்தார்.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்