Home Featured தமிழ் நாடு ராம்குமார் மரணம்: தற்போதைய பரபரப்புத் தகவல்கள்!

ராம்குமார் மரணம்: தற்போதைய பரபரப்புத் தகவல்கள்!

688
0
SHARE
Ad

swathi_ramkumarசென்னை – இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சிறையிலுள்ள சமலறையில் மின்சாரக் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று காலை முதல் இச்சம்பவம் குறித்து வெளிவந்து கொண்டிருக்கும் பரபரப்புத் தகவல்கள் இதோ:

  • ராம்குமாரின் தற்கொலை குறித்து அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் வெளியிட்டுள்ள தகவலில், ராம்குமார் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையிலேயே இல்லை என்றும், அவர் எப்படியாவது தன் மீது சுமத்தப்பட்ட வீண் பழியிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
  • ராம்குமார் கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் மிகவும் அமைதியாகக் காணப்பட்டதாகவும், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உணவுக்கு மட்டுமே சென்றவர், மதிய உணவுக்குச் செல்லவில்லை என்றும், மாலை 4 மணியளவில் தண்ணீர் குடிக்கச் சென்ற போது தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்றும் சக கைதிகள் தெரிவித்துள்ளனர்.
  • ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த அறை அமைந்திருந்த உயர் பாதுகாப்புத் தொகுதியின் சமையலறையில் சுவிட்ச் பெட்டி கடந்த சில நாட்களாக பழுதடைந்து இருந்ததாகவும், மேலும் அந்த தொகுதியில் இருந்த இரகசியக் கேமராவும் பழுதடைந்திருந்ததால், ராம்குமார், தற்கொலை நிகழ்வு அதில் பதிவாகவில்லை என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • ராம்குமார் சாவில் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டாக வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். மேலும், ராம்குமார் இறந்தது பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வந்து உலகத்திற்கு தெரியப்படுத்த, உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு, உடனடியாக பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
  • மிகவும் பாதுகாப்புமிக்க சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பது ஏற்கக் கூடியதாகவும், நம்பும்படியும் இல்லை என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ராம்குமாரின் பாதுகாப்பைக் கூட சிறைத்துறை உறுதி செய்ய முடியாதது வெட்கக்கேடானது. சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்ட சில நாட்களிலேயே ராம்குமார் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. ராம்குமார் மரணம் பற்றி சந்தேகம் எழுந்து இருப்பதால், இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • ராம்குமார் மரணம் குறித்து தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளது. பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையில் விசாரணை நடத்தும் மனித உரிமை ஆணையம், 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
  • ராம்குமாரின் பிரேதப் பரிசோதனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் முதலில் தடை விதித்தது. பின்னர் அனுமதி அளித்துள்ளது. ராம்குமாரின் மரணம் குறித்து குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடுமாறு தந்தை பரமசிவம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 4 மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

 

#TamilSchoolmychoice