Home Featured நாடு ஜோகூரில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை – சுல்தான் உத்தரவு!

ஜோகூரில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை – சுல்தான் உத்தரவு!

568
0
SHARE
Ad

Johor-sultan-440-x-215

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநிலத்தில் வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதாக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார் அறிவித்துள்ளார். இதுபோன்ற வீதி ஆர்ப்பாட்டங்கள் பொதுமக்களிடையே பிரிவினையை உண்டாக்குகின்றன என்றும் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள் அதனை சரியான, பொருத்தமான வழிகளில் வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஜோகூர் சுல்தான் தெரிவித்ததாக ஸ்டார் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பெர்சே-5 பேரணி ஜோகூர் மாநிலத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

#TamilSchoolmychoice

பெர்சே இயக்கத்தினர் ஜோகூர் சுல்தானின் உத்தரவைப் பின்பற்றுவார்களா அல்லது அதையும் மீறி பேரணியை நடத்துவார்களா என்பது தெரியவில்லை.

அதே சமயம் சுல்தானாக இருப்பவர் அரசியல் விவகாரங்களில் இதுபோன்று தலையிட முடியுமா, நாட்டின் அரசியல் சட்ட சாசனத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிமனித உரிமைகள் மீது தடை விதிக்க முடியுமா என்ற சட்டக் கேள்வியும் எழுந்துள்ளது.

“பொது இடங்களில் கூடி, தலைவர்களையும், சில தனிநபர்களையும் தரக்குறைவாகப் பேசுவது பொறுப்பற்ற செயல்” என சாடியுள்ள ஜோகூர் சுல்தான் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் ஜோகூர் மாநிலத்தில் நடைபெற அனுமதிக்க முடியாது என்றும், பாசீர் கூடாங்கில் நடைபெற்ற ‘ஹிம்புனான் பங்சா ஜோகூர்’ என்ற நிகழ்ச்சியில் உரையாற்றும்போது கூறியுள்ளார்.

பெர்சே போராட்டத்தில் ஜோகூர் மக்களும், அரசு சார்பற்ற இயக்கங்களும் இணையக் கூடாது என்றும் சுல்தான் அறிவுறுத்தியுள்ளார்.

“தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை நேரடியாக சென்று கண்டு உங்களின் பிரச்சனைகளைக் கூறுங்கள். அவர்கள் உங்களின் குறைகளைக் கேட்கவில்லை என்றால் திறமையான புதிய தலைவரைத் தேர்ந்தெடுங்கள்” என்றும் ஜோகூர் சுல்தான் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.