Home Featured நாடு மரியா விடுதலைக்காகப் போராடுவோம் – அம்பிகா சூளுரை!

மரியா விடுதலைக்காகப் போராடுவோம் – அம்பிகா சூளுரை!

744
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சொஸ்மா எனப்படும் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியான் சின்னின் விடுதலைக்காக அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக பெர்சே இணைத் தலைவர்களில் ஒருவரான அம்பிகா சீனிவாசன் சூளுரைத்துள்ளார்.

ஒரு வழக்கறிஞருமான அம்பிகா நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பெர்சே 5 பேரணியை முன்னின்று தலைமை தாங்கி நடத்தியதோடு, அதன் வெற்றிக்குக் காரணமானவர்களில் ஒருவராகப் பாராட்டப்பட்டுள்ளார்.

ambiga-bersih-5

#TamilSchoolmychoice

பெர்சே 5 பேரணியில் உரையாற்றும் அம்பிகா….

பேரணிக்கு முதல் நாள் மரியா சின் திடீரெனக் கைது செய்து காவலில் வைக்கப்பட்டதோடு, பெர்சே இயக்கத்தின் முக்கியத் தூண்கள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், பெர்சே பேரணி முடங்கிப் போகக் கூடும் என்ற அச்சம் பேரணியின் பங்கேற்பாளர்களிடையே நிலவியது.

இந்த சூழ்நிலையில்தான் பேரணியை முன்னின்று துணிச்சலாக நடத்தி, காவல் துறையினருடனும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு, பேரணியை வெற்றிகரமான ஒன்றாக உருமாற்றினார் அம்பிகா.

maria-chin-bersih-5-arrested

ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சி காரணமாக, சூடானில் இருப்பார் என்பதால் துன் மகாதீர் பெர்சே பேரணிக்கு வரமாட்டார் என முதலில் தகவல்கள் வெளியானதால் ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் சோர்ந்துதான் போனார்கள் எனலாம்.

இருப்பினும் சூடானிலிருந்து சரியான நேரத்திற்குப் பறந்து வந்து, விமானத்திலிருந்து இறங்கும் போதே, பெர்சே 5 மஞ்சள் நிற டி-சட்டையுடன் கலக்கினார் மகாதீர். அவரும், மொகிதின் யாசின், முக்ரிஸ் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டதும் பங்கேற்பாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது எனலாம்.

mahathir-bersih-5

சூடானிலிருந்து வந்து விமானத்திலிருந்து இறங்கியபோதே மஞ்சள் டி-சட்டையில் கலக்கிய மகாதீர்….

இந்த சூழலில்தான் இன்னொரு புறத்தில் அம்பிகா பெர்சே பேரணியை வெற்றிகரமாக வழி நடத்தினார்.

மரியா சின் மீது சொஸ்மா சட்டம் பாய்ந்துள்ளதால், பெர்சே இயக்கத்தினரும், எதிர்க் கட்சியினரும், சமூகப் போராளிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் என்றாலும், இதன் மூலம் பெர்சே போராளிகளின் போராட்ட உணர்வும், எதிர்ப்பு குணமும் மேலும் வலிமையடைந்துள்ளது, இறுகியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் என ஐஎஸ்ஏ சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டு வரப்பட்ட சொஸ்மா, மரியா சின் போன்ற சமூகப் போராளிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் அம்பிகா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

எங்களின் சக்திக்கு ஏற்ற வகையில் அனைத்து வழிகளிலும் போராடி, மரியா சின்னை விடுதலை செய்வோம் என்றும் அம்பிகா முழங்கியுள்ளார்.