
கோலாலம்பூர் – நேற்றிரவு தலைநகர் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய வளாகத்திலிருந்து விநாயகப் பெருமானுக்கான தங்கரதமும், முருகப் பெருமானின் வெள்ளி இரதமும் இணைந்த இரத ஊர்வலத்துடன் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
விநாயகரின் தங்க இரதம் முன்வர வழக்கமாக தைப்பூசத்தில் உலா வரும் முருகப் பெருமானின் வெள்ளி இரதம் பின்தொடர்ந்து வந்தது. நேற்றிரவு முதற்கொண்டே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரத ஊர்வலத்தில் பங்கு கொண்டு நடந்து வந்தனர்.

நேற்று நள்ளிரவு முதல் கோலாலம்பூரில் இரதம் ஊர்வலம் செல்லும் சாலைகள் பால்குடங்கள் எடுத்து வந்த பக்தர்கள், மற்றும் நடந்து வந்த பொதுமக்களால் நிரம்பி வழிந்தன.
வழியெங்கும், ஏராளமான தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு, குடிநீரும், குளிர்பானங்களும், உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டன.
ஆங்காங்கே, இலவச நடமாடும் கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இரத ஊர்வலம் வரும் வழியெங்கும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்ததால், தலைநகர் ஈப்போ சாலை 4-வது மைல் வளாகத்தை இரத ஊர்வலம் வந்தடைந்தபோது, காலை 10.00 மணியாகிவிட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இரதம் பத்துமலை திருத்தலத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இன்று காலை முதல் பத்துமலை திருத்தலத்தில் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் காவடிகளும் பத்துமலையில் வரத் தொடங்கியிருக்கின்றன.
நாளை புதன்கிழமை காலையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியின்போது துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி வருகை தருகிறார்.