Home தேர்தல்-14 நஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்

நஜிப் தம்பதியர் பெக்கான் சென்றனர்

996
0
SHARE
Ad

பெக்கான் – 42 ஆண்டுகளாக தான் வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கு, டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று தனது துணைவியாருடன் வந்தடைந்தார். அங்கு வாக்காளர்களுடன் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வார்.

அங்கு அவருக்கு கண்ணீருடன் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர் என ஊடகங்கள் தெரிவித்தன.

பெக்கான் நஜிப்பின் தனிப்பட்ட வாழ்க்கையோடும், அரசியல் பயணத்தோடும் இரண்டறக் கலந்துவிட்ட நாடாளுமன்றத் தொகுதியாகும். 1976-ஆம் ஆண்டில் நஜிப்பின் தந்தையார் துன் அப்து ரசாக் அகால மரணமடைய தனது 22-வது வயதில், இலண்டனில் கல்வி கற்று வந்த நஜிப் பெக்கான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

இத்தனை ஆண்டுகளாக மிக இளவயதில் – 22 வயது 7 மாதமே ஆகியிருந்த நிலையில் – மலேசிய நாடாளுமன்றத்தில் நுழைந்த நாடாளுமன்ற உறுப்பினராக சாதனையைக் கைவசம் வைத்திருந்தவர் நஜிப். இந்த ஆண்டில்தான் அவரது சாதனை முறியடிக்கப்பட்டது. முறியடித்தவர் 22 வயது 3 மாதமே ஆகிய நிலையில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் வென்ற பிரபாகரன்.

தற்போது முதன் முறையாக தனது வாழ்நாளில் தேசிய முன்னணி ஆட்சியை இழந்து நிற்கும் நிலையில் – அதற்கு அவரே முக்கியக் காரணமாகிவிட்ட சூழ்நிலையில் – இன்று பெக்கான் திரும்பியிருக்கிறார் நஜிப்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22 மே) ஊழல் தடுப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்து 1எம்டிபி விவகாரம் குறித்த தனது வாக்கு மூலத்தை அவர் வழங்குவார்.