Home நாடு ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவிற்குத் தப்பித்தார் – அறிக்கை தகவல்!

ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவிற்குத் தப்பித்தார் – அறிக்கை தகவல்!

819
0
SHARE
Ad

கோலாலம்பூர் – புதன்கிழமை காவல்துறையிடம் சரணடைவதாகக் கூறிய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் இந்தோனிசியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக அறிக்கை ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த மே 27-ம் தேதி,தென்மேற்கு ஜோகூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனிசியாவின் புலாவ் கரிமுன் தீவிற்கு அவர் தப்பிச் சென்றதாக சின்சியூ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

புலாவ் காரிமுன் பகுதியானது பாலியல் தொழிலுக்குப் பெயர் போன ஒரு பகுதியாகும். வார இறுதி நாட்களில் பரபரப்பாகக் காணப்படும் அப்பகுதிக்கு மலேசியர்களும், சிங்கப்பூரர்களும் சென்று உல்லாசமாக இருப்பது வழக்கம் என வேர்ல்ட் ஆஃப் பஸ் என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி மதுபான கண்ணாடிப் போத்தல்களை சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகத்தின் முன் போட்டு உடைத்தது – மற்றும் தனது கைத்துப்பாக்கியை புகைப்படத்தின் வழி காண்பித்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 48 வயதான ஜமால் யூனுஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அம்பாங் புத்திரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீது மே 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பிணை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த தருணத்தில் அவர் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பித்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்ட ஜமால், தான் தப்பித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், புதன்கிழமை காவல்துறையிடம் சரணடைவேன் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.