Home நாடு ஜமால் யூனுசைக் கொண்டுவர காவல்படை இந்தோனிசியா சென்றது

ஜமால் யூனுசைக் கொண்டுவர காவல்படை இந்தோனிசியா சென்றது

1033
0
SHARE
Ad
டத்தோ ஜமால் முகமட் யூனுஸ் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – இந்தோனிசியக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசை மலேசியா கொண்டுவர மலேசியக் காவல் துறையின் குழு ஒன்று நேற்று புதன்கிழமை மாலையில் ஜாகர்த்தா புறப்பட்டுச் சென்றது.

அடுத்த ஓரிரு நாட்களில் சட்ட நடைமுறைகள் நிறைவு பெற்றதும் சிலாங்கூர் மாநில காவல் துறையைச் சேர்ந்த இந்தக் குழுவினர் ஜமாலை கோலாலம்பூர் கொண்டு வருவர்.

இந்த விவரங்களை காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ புசி ஹருண் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

ஜமால் மீது குற்றச்சாட்டுகள்

#TamilSchoolmychoice

கடந்த மே 27-ம் தேதி,தென்மேற்கு ஜோகூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனிசியாவின் புலாவ் கரிமுன் தீவிற்கு அவர் தப்பிச் சென்றதாக ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டிருந்தன.

கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி மதுபான கண்ணாடிப் போத்தல்களை சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகத்தின் முன் போட்டு உடைத்தது – மற்றும் தனது கைத்துப்பாக்கியை புகைப்படத்தின் வழி காண்பித்தது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக 48 வயதான ஜமால் யூனுஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அம்பாங் புத்திரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீது மே 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 3 ஆயிரம் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், பிணை வழங்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த தருணத்தில் அவர் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்து நழுவி தப்பித்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தோனிசியாவில் இருந்து காணொளிகளை ஜமால் வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

குறைந்தது 6 குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜமால் விசாரிக்கப்படுவதாக காவல் துறை ஏற்கனவே அறிவித்திருக்கிறது. தற்போது பிணை வழங்காமல் காவல் துறையின் காவலில் இருந்து தப்பிச் சென்ற குற்றமும் சேர்ந்துள்ளது.

நாட்டை விட்டு ஓடிவிட்ட ஜமால் யூனுஸ் அவரது சுங்கை பெசார் அம்னோ தொகுதி தலைவராக அண்மையில் நடந்த அம்னோ தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.