Home வணிகம்/தொழில் நுட்பம் தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018

1402
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி  தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மைநாடி அறவாரியத்தின் தலைவர் மதிப்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் டான்ஸ்ரீ சின்னதுரை கலந்து கொண்டார். ஐந்து பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் நாடு தழுவிய அளவில் ஏறக்குறைய 300  தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்றனர்.

 ஏப்ரல் 2009ஆம் ஆண்டு கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் மற்றும் மலேசியச் சமூகக் கல்வி அறவாரியமும் இணைந்து தொடங்கிய தித்தியான் டிஜிட்டல் திட்டம் பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி வாரியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனும் பிரதமர் துறை இலாகா, சிலாங்கூர் மாநில அரசு, மலேசிய சமூகக் கல்வி அறவாரியம், மைநாடி அறவாரியம், தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம், டி.எச்.ஆர் ராகா, மெக்னம் கேர், சுங்கை ஊஜோங் ரோட்டரி கிளப், தனிநபர் திரு.ராமச்சந்திரன் அப்பண்ணன் ஆகியோரின் நிதியுதவியிலும் மாபெரும் கூட்டு முயற்சியில் தொடர்ந்து முன்னகர்த்தப்பட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி நாடு முழுவதும் 50 தமிழ்ப்பள்ளிளைச் சேர்ந்த சுமார் 21,305 மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக தகவல் தொழில்நுட்பக் கல்வியினை தமிழ்மொழியில் பயின்று வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் 14,322 இந்திய மாணவர்கள் ஆறாம் ஆண்டுவரை இத்திட்டத்தில் பங்குபெற்று இடைநிலைப்பள்ளிகளுக்கும் உயர்க்கல்வி கூடங்களுக்கும் சென்றுள்ளனர். இத்திட்டத்தின்வழி தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவரும் வாரத்தில் குறைந்தது ஒரு மணிநேரம் கட்டற்ற மென்பொருள் வாயிலாக சுயமாக கணினியை இயக்கவும், செயல்படுத்தவும் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களில் சுமார் 60 விழுக்காட்டினர் வீட்டில் கணினி இல்லை என்பதையும் இத்திட்டின் வாயிலாகவே அவர்கள் முழுவதும் கணினியை இயக்கவும் பயன்படுத்துவும் முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் முறையாக செயல்பட ஒவ்வொரு மாணவருக்கும் நேர்த்தியான திறனறிவு பாடத்திட்டங்கள் உருவாக்க்கப்படு, (Module) இலவசமாக வழங்கப்பட்டு, ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு, திட்ட அதிகாரிகள் மாதம் ஒருமுறை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று மேற்பார்வையிடுகின்றனர்.

பள்ளியிலுள்ள கணினி நடுவங்களில் ஏற்படும் சிக்கல்கள் உடனடியாக களையப்படுவதோடு, மாணவர்களின் அடைவுநிலையை உறுதிப்படுத்த ஆண்டுக்கு இரு முறை தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இத்திட்ட மாணவர்களின் திறனை வெளிகொணரவும் பொதுப் பார்வைக்குக் கொண்டு செல்லவும் தளம் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு தொடங்கி மாநில, தேசிய அளவில் இரு நிலைகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போட்டிகளில் தித்தியான் டிஜிட்டல் திட்ட மாணவர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள 524 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பங்கெடுக்க வழியமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு நடத்தப்பட்ட போட்டியில் வடிவமைத்தல் (Graphic Designing), வலைத்தள உருவாக்கம் (Website Designing), இருபரிமாண அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி (2D Animation), தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவுப் புதிர் போட்டி (ICT Quiz) போன்றவை வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் வெற்றிகள்

இத்திட்டம், கற்றற்ற மென்பொருளின் அதிக பயனர்களைக் கொண்டுள்ளதன் அடிப்படையில் 2011-ஆம் ஆண்டு மலேசிய சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தது, தகவல் தொழில்நுட்பம் வாயிலாக தமிழ்ப்பள்ளிகளுக்கு உந்துதல் வழங்கியமைக்காக உலகலாவிய இந்திய வம்சாவளியினர் அமைப்பின் (GOPIO), கோப்பியோ அனைத்துலகத் திறன் விருதை 2015-இல் (The GOPIO International Excellence Award 2015) பெற்றது.

7 முதல் 9 வயதுக்கான Doodle for Google என்ற கூகுளுக்கான கருத்தோவியம் வரையும் போட்டியில் இத்திட்ட மாணவி வைஸ்னவி (வலம்புரோசா தமிழ்ப்பள்ளி, கிள்ளான்) முதல் பரிசை 2014ஆம் ஆண்டு வென்றது, சிலாங்கூர் மாநில அளவில் 2015ஆம் ஆண்டு சிறந்த கணினி நடுவத்துக்கான விருதை இத்திட்டம் மூலம் முன்னெடுத்த நோர்த் ஹம்மொக் தமிழ்ப்பள்ளி வென்றது ஆகியன இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

21 நூற்றாண்டு கற்றல் கற்பித்தலுக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தின் தேவையைக் கருதி, முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் 10,173 பள்ளிகளைச் சேர்ந்த 1.2 மில்லியன் மாணவர்கள் கணினி மயச் சிந்தனைத் திறனையும் கணினி அறிவியலையும் 2017ஆம் ஆண்டு தொடங்கி பெறுவார்கள் என்று பிரதமர் அண்மையில் அறிவித்திருந்தார். அதில், முதலாம் ஆண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பின்வழி அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுதல், படிவம் ஒன்றுக்கு அடிப்படை கணினி அறிவியல், படிவம் நான்குக்கு தேர்வு பாடமாக கணினி அறிவியல் வழங்கப்படுதல் ஆகியவை அமைகின்றன. இத்திட்டம் வெற்றிபெற நாட்டில் உள்ள அனைத்துப் தமிழ்ப்பள்ளிகளிலும் கணினி வசதிகள் முழுமையாகப் இருப்பது கருதுகோளாகும். இப்போதிருக்கும் கணினி வசதிகளையும் திதியான் டிஜிட்டல் திட்ட கணினி நடுவங்களையும் சேர்த்து ஏறக்குறைய 50 விழுக்காட்டு பள்ளிகளில் மட்டுமே முழுமையான கணினி வசதிகள் இருப்பது நிதர்சனம். அவ்வகையில் அரசாங்கமும் கல்வி அமைச்சும் அனைத்து பள்ளிகளிலும் கணினி வசதிகளை  ஏற்படுத்த ஆவன செய்ய வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டு குழு தலைவர் திரு. குணசேகரன் கந்தசுவாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், கடந்த மூன்று மாதமாக மாநில நிலையில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற 89 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 299 மாணவர்கள் தேசிய நிலை போட்டிகளில் பங்குகொள்கின்றனர் எனக் குறிப்பிட்டார். மேலும், மாநில நிலையிலான போட்டிகளில் சுமார் 154-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்து 552-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பல நிலைகளில் தங்களது திறன்களையும் அனுபவங்களையும் பெருக்கிக் கொண்டதாக குறிப்பிட்டார்.

இப்போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள சுமார் 50 தமிழ்ப்பள்ளிகளில் கணினி நடுவங்களில் கற்றல் கற்பித்தல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது என்றார் அவர். கடந்த 9 ஆண்டுகளாக இத்திட்டம் முறையான பாடத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 21,305 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் வகுப்புகளில் அடிப்படை அலுவலக மென்பொருள் பயன்பாடு தொடங்கி நிரலாக்க மொழி வரையிலான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவைப் பெறுகின்றனர். இருப்பினும் இந்த 20,089 எண்ணிக்கை என்பது மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் வெறும் 25 விழுக்காடு மட்டுமே. மேலும், 25 விழுக்காட்டு மாணவர்களுக்கு பிற அமைப்புகள் தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனை வழங்கும் நிலையில் மேலும் 50 விழுக்காடு மாணவர்கள் இன்னும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவைப் பெறாமலே இருக்கின்றனர்.

மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தில் தரமான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கற்றலை நோக்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்நகர்த்துவது முதன்மை குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தித்தியான் டிஜிட்டல் திட்டம் தனது நிபுணத்துவ உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது. ஆகவே, மலேசிய இந்தியர் பெருந்திட்ட கல்விப் பிரிவுடன் தரமான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்ப்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

அடுத்து:

“தொழில் நுட்பத் திறனைப் பெருக்குங்கள் – வாய்ப்புகள் பெருகும்” – தித்தியான் டிஜிட்டல் போட்டி முடிவு பரிசளிப்பு விழாவில் டத்தோஸ்ரீ டாக்டர் ஜெயந்திரன் உரை…