இதனைத் தொடர்ந்து வருண் இராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்கியராஜ் தலையிட்டு கேட்டுக் கொண்டதற்கிணங்க, வருண் இராஜேந்திரன் பெயரையும் படத்திற்கான உருவாக்கத்தில் பங்கு பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலில் சேர்த்துக் கொள்ள தான் ஒப்புக் கொண்டதாக முருகதாஸ் வழக்கின் சமரசத்திற்குப் பின்னர் வெளியிட்ட காணொளி ஒன்றில் தெரிவித்தார்.
மற்றபடி படத்தின் கதை, திரைக்கதை,வசனம், இயக்கம் என தனது பெயரில்தான் படம் வெளியாகும் என முருகதாஸ் மேலும் தெரிவித்தார்.
தனது பெயரை அங்கீகரித்ததே போதும் என்றும் அதுவே தனக்கான நஷ்ட ஈடு என்றும் வருண் இராஜேந்திரன் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமரசத் தீர்வுக்காக பணப் பரிமாற்றம் ஏதும் நிகழ்ந்ததாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த சமரசத் தீர்வைத் தொடர்ந்து படம் வெளியாவதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி தீபாவளியை நவம்பர் 6-ஆம் தேதி வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.