இதற்கிடையே, முதல்வர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லை எனக் கூறி, அதிமுகவில் இருந்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி தினகரன் உடன் இணைந்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆயினும், வருகிற தேர்தலில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அவர்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் போஸ் ஆகியோரின் மறைவினால், திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாகின. இதையடுத்து ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழக்கு ஒன்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தவிர தமிழகத்தில் காலியாக இருக்கின்ற 18 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும். மேற்கண்ட மூன்று தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அங்கு தேர்தல் நடக்காது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரகாஷ் சாஹு அறிவித்துள்ளார்.