நியூசிலாந்தின் கிரிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதி ஒன்றில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த வேளையில், மேலும் 30 பேர் அதற்கு பின்னர் உயிர் இழந்துள்ளதாக ஜசிண்டா குறிப்பிட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நால்வரை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒருவர் பெண் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும், மலேசியாவைச் சேர்ந்த இருவர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. முகமட் தார்மிசி சுயிப் எனப்படும் அந்த ஆடவருக்கு, சம்பவத்தில் முதுகில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயினும், தர்மிசியின் மகனின் நிலவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.