Home உலகம் கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை

கிரிஸ்ட்சர்ச்: 3 மலேசியர்கள் தேறி வருகின்றனர் – ஒருவரைக் காணவில்லை

797
0
SHARE
Ad
கிரிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் பிரெண்டன் டாரண்ட்

கிரிஸ்ட்சர்ச் : கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயம்பட்ட 3 மலேசியர்களும் தற்போது உடல்நலம் தேறி வருவதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக இருந்து வருகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முகமட் தர்மிசி ஷூயிப் (46), ரஹிமி அகமட் (39), முகமட் நஸ்ரில் ஹிஷாம் ஒமார் (46) ஆகியோரே அந்த மூவராவர்.

எனினும், இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மற்றொரு மலேசியரான 17 வயது முகமட் ஹசிக் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் கிரிஸ்ட்சர்ச் தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் முகமட் தர்மிசியின் மகனாவார். சம்பவம் நடந்தபோது இவர் தனது தந்தையுடன் இருந்தார். முகமட் தர்மிசியின் மற்றொரு மகனான 12 வயது முகமட் ஹரிஸ், சம்பவத்தால் ஏற்பட்ட மனநல அதிர்ச்சிக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிரிஸ்ட்சர்ச் சம்பவத்தில் காயமடைந்த ரஹிமி அகமட்..

இதற்கிடையில் சம்பவத்தில் காயமடைந்த மூன்று மலேசியர்களுக்கு தரமிக்க சிகிச்சை அளிக்கப்படுவதை மலேசிய அரசாங்கம் உறுதி செய்யும் என வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

காயமடைந்த மலேசியர்களின் குடும்பத்தாரின் நலனையும் மலேசிய அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் எனவும் சைபுடின் உறுதியளித்தார்.

கிரிஸ்ட்சர்ச்சிலுள்ள இரு வெவ்வேறு பள்ளிவாசல்களில், வெள்ளிக்கிழமை (மார்ச் 15) நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். ஒரு சிலரைக் காணவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரென்டன் டாரண்ட் என்னும் 28 வயதான ஆஸ்திரேலிய ஆடவன் நேற்று சனிக்கிழமை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டான். அதையடுத்து, பிரென்டனை காவலில் வைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், இதர குற்றச்சாட்டுகள் விரைவில் பிரெண்டன் மீது பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.