Home வணிகம்/தொழில் நுட்பம் “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” – சிங்கையில் முத்து நெடுமாறன் உரை நிகழ்த்துகிறார்

1049
0
SHARE
Ad

சிங்கப்பூர் – தமிழகத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் பிரிவு நாளை சனிக்கிழமை 20 ஏப்ரல் 2019-ஆம் நாள் சிங்கப்பூர், 2, பீட்டி சாலையில் உள்ள உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்தும் நிகழ்ச்சியில் மலேசியாவின் கணினி தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

மாலை 5.15 மணியளவில் தேநீர் உபசரிப்புடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சி மாலை 6.00 மணி தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் பங்கு கொண்டு தங்களின் ஆய்வினைப் படைக்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பில் முத்து நெடுமாறன் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றவிருக்கிறார். இந்திய, இந்தோசீன மொழிகளுக்கான எழுத்துரு வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் முத்து நெடுமாறன், முரசு அஞ்சல் மென்பொருளின் வடிவமைப்பாளர் என்பதோடு செல்லினம் குறுஞ்செயலியின் வடிவமைப்பாளரும் நிறுவனரும் ஆவார்.
முத்து நெடுமாறன், மலேசியாவில் இருந்து, குறுஞ்செயலி (மொபைல் எப்) தொழில்நுட்பத் தளத்தில் வெளிவரும் ஒரே தமிழ் இணைய ஊடகமான ‘செல்லியல்’ மின்னூடகத்தின் நிறுவனரும் வடிவமைப்பாளருமாவார்.