Home உலகம் கொழும்பு தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவனின் தந்தை – இரு சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி

கொழும்பு தாக்குதல்களின் மூளையாக செயல்பட்டவனின் தந்தை – இரு சகோதரர்கள் துப்பாக்கிச் சூட்டில் பலி

820
0
SHARE
Ad

கொழும்பு – ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களின் மூளையாக – பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சஹ்ரான் ஹாஷிம் என்ற நபர் என்பதும் அவரைப் பற்றிய விவரங்களும் தற்போது பகிரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26) கிழக்கு இலங்கையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளின்போது ஒரு வீட்டில் தங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். அந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்தவர்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் இரு சகோதரர்களான சையினி ஹாஷிம், ரில்வான் ஹாஷிம் மற்றும் அவர்களின் தந்தை முகமட் ஹாஷிம் ஆகியோரும் அடங்குவர் என அவர்களின் உறவினர்கள் அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

சையினி ஹாஷிம், ரில்வான் ஹாஷிம் அவர்களின் தந்தையார் முகமட் ஹாஷிம் ஆகிய மூவரும் சமூக ஊடகங்களில் உலவி வரும் காணொளி ஒன்றில், தங்களின் மதத்தில் நம்பிக்கையற்றவர்கள் மீது எல்லா முனைகளிலும் போர் நடத்தப்படும் எனக் கூறியிருந்தனர்.

#TamilSchoolmychoice

பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பந்தப்பட்ட வீட்டில் இவர்கள் இருந்தனர். காணொளியில் காணப்பட்ட அந்த மூவரும்தான் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தவர்களின் பட்டியலில் இருந்தார்கள் என்பதை நியாஸ் ஷரிப் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார். நியாஸ் ஷரிப், 250 பேர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் தாக்குதல்களின் மூளையான சஹ்ரானின் மைத்துனராவார்.

கொழும்பு தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் சுமார் 10 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்புடையவர்களையும், தாக்குதல்களை நடத்திய இரண்டு உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்களையும் தேடி வருகின்றனர்.

இதுவரையில் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிரியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.