Home One Line P1 பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு கல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்!

பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு கல்வி அமைச்சர் பதவியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்!

939
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், அப்பொறுப்பிலிருந்து விலகுவதாக இன்று வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.

நாளை வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) இந்த பதவி விலகல் அமலுக்கு வருவதாக அவர் தெரிவித்தார்.

முன்னதாக அவர் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை புத்ராஜெயாவில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இச்சந்திப்பானது பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

இன்று பிற்பகல் மஸ்லீ தனது பதவி விலகலை அறிவிப்பார் அல்லது அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் அவர் மாலை அதனை உறுதிபடுத்தினார்.

கல்வி அமைச்சராக தாம் அப்பதவியினை ஏற்ற போது, பல எதிர்மறையான விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார்.

14-வது பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் பெர்சாத்து கட்சியில் மஸ்லீ இணைந்தார்.  சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மஸ்லீ, நம்பிக்கைக் கூட்டணி மத்திய அரசைக் கைப்பற்றியபோது, ​​கல்வித் துறையை வைத்திருப்பதற்கான முதல் தேர்வாக இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதிலாக பிரதமர் மகாதீர் தனது சொந்த இலாகாவை வைத்திருக்க விரும்பினார். பல தரப்புகள் நம்பிக்கைக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் பிரதமர் மற்றொரு அமைச்சகத்தை வைத்திருப்பதை தடை செய்ததால் அப்போது அவர் அதனை ஏற்கவில்லை.

2021-ஆம் ஆண்டில் மாணவர்கள் கறுப்பு காலணிகளை அணிய வேண்டும் என்றும், நான்காம் ஆண்டு மலாய் மொழி பாடத்தில் ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்தியதும் அவரது பதவி காலத்தில் மிகுந்த விமர்சனங்களுக்கு உட்பட்ட திட்டங்களாகும்.