Home One Line P2 கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ

கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து சாதனை படைத்த சவுதி அராம்கோ

750
0
SHARE
Ad

துபாய் – அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலினால் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டத்தினால் சவுதி அராம்கோவின் பங்குகள் விலை வீழ்ச்சிகள் கண்டது ஒருபுறமிருக்க, இன்னொரு புறத்தில் அதன் பங்குகளில் கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்து, பொதுப் பங்கு விற்பனையின் மூலம் ஏற்கனவே திரட்டிய  25.6 பில்லியன் டாலர் முதலீட்டைத் தற்போது 29.4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தியுள்ளது அந்நிறுவனம்.

பங்குச் சந்தை பொது விற்பனை விதிகளின்படி ஒரு நிறுவனப் பங்குகளுக்கு அளவுக்கதிகமாக வரவேற்பு பொதுமக்களிடையேயும், முதலீட்டாளர்களிடையேயும் இருக்குமானால், அந்நிறுவனம் ‘கிரின்ஷூ ஓப்ஷன்’ (greenshoe option) என்ற முறையின் மூலம் கூடுதலாக பங்குகளை விற்பனை செய்ய முடியும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தித்தான் சவுதி அராம்கோ கூடுதலாக 450 மில்லியன் பங்குகளை விற்பனை செய்திருக்கிறது.

ஏற்கனவே டிசம்பர் (2019) மாதத்தில் 3 பில்லியன் பங்குகளை தலா 32 ரியால் (8.53 அமெரிக்க டாலர்) விலையில் விற்று, 25.6 பில்லியன் டாலர் முதலீட்டை பொதுப் பங்கு விற்பனையின் மூலம் திரட்டியதன் மூலம் உலகிலேயே மிகப் பெரிய பொதுப் பங்கு விற்பனையை நடத்திய சாதனையை சவுதி அராம்கோ பெற்றுவிட்டது.

#TamilSchoolmychoice

இந்தக் கூடுதல் 450 மில்லியன் பங்குகளை விற்று தனது முதலீட்டு நிதியை 29.4 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளதால் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது சவுதி அராம்கோ. இந்த சாதனையை இனி இன்னொரு நிறுவனம் எப்போது நிகழ்த்தும் என்பதைக் காண அனைத்துலக வணிக உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி 34 ரியால் என்ற விலையில் சரிவு கொண்ட அராம்கோ பங்குகள் கடந்த வியாழக்கிழமை 35 ரியால் என்ற விலையில் உயர்வு கண்டது.

இந்த விலையில் அந்த நிறுவனத்தின் மதிப்பு 1.87 டிரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக மதிப்புடைய நிறுவனமாக சவுதி அராம்கோ திகழ்கிறது.