Home One Line P2 “பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…

“பாரதபூமி” – கொவிட்-19 போராளிகளுக்கு நன்றி செலுத்தும் இளையராஜாவின் பாடல் – எஸ்.பி.பாலா குரலில்…

1139
0
SHARE
Ad

சென்னை – கொவிட்-19 பாதிப்புகளால் நடமாட்டக் கட்டுப்பாடுகளால் முடங்கிக் கிடக்கும் இசைக் கலைஞர்கள் பலரும் தங்களால் இயன்ற அளவுக்கு பாடல்களையும், இசை உருவாக்கங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

கொவிட்-19 பாதிப்புகளை எதிர்த்துப் போராடும் போராளிகளான முன்னிலைப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “பாரதபூமி” என்ற பாடலை இளையராஜாவே எழுதி இசையமைத்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த இனிய பாடலைப் பாடியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இளையராஜாவுக்கும், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் இடையில் பாடல்கள் பதிப்புரிமை தொடர்பில் மனக் கசப்பு பகிரங்கமாக ஏற்பட்டது. எனினும், நீண்ட கால நண்பர்களான இருவரும் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்து மனம் விட்டுப் பேசி தங்களின் கருத்து வேறுபாடுகளைக் களைந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

சில படங்களிலும் இளையராஜா இசையமைக்க எஸ்.பி.பாலா பாடல்களைப் பாடினார். அவர்கள் இருவரும் இணைந்து படைக்கும் இன்னொரு இசைப் படைப்பாக பாரதபூமி பாடல் அமைந்திருக்கிறது.

இளையராஜாவுக்கு உதவியாக இந்தப் பாடல் உருவாக்கத்தில் பியானோ வாசித்துப் பங்காற்றியிருப்பவர் இள வயது லிடியன் நாதஸ்வரம். பதின்ம வயதுடைய லிடியன் நாதஸ்வரம் உலக அளவிலான பியானோ போட்டிகளில் பங்கு பெற்று முதலிடத்தைப் பெற்று மேற்கத்திய இசைவல்லுநர்களையும் அசத்தியிருக்கிறார்.

இப்போது இளையராஜாவுடன் இணைந்து இந்தப் பாடல் உருவாக்கத்திலும் பங்காற்றியிருக்கிறார். பாடலுக்கு பியானோ வாசித்திருப்பதுடன் கீபோர்ட் எனப்படும் இசைக்கருவியின் இசைக் கோர்ப்பிலும் இளையராஜாவுக்கு உதவியிருக்கிறார் லிடியன்.

இந்தி, தமிழ் இரு மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்திப் பாடலை ஷான் என்பவர் பாடியிருக்கிறார்.

இந்த இனிய பாடலின் தமிழ் வடிவத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் கண்டு, கேட்டு மகிழலாம் :