Home One Line P1 மலேசியாகினி மீது சட்டத் துறைத் தலைவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மலேசியாகினி மீது சட்டத் துறைத் தலைவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

540
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருண் மலேசியாகினி ஊடகம் மீதும் அதன் முதன்மை ஆசிரியர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நாளை கூட்டரசு நீதிமன்றத்தில் செவிமெடுக்கப்படும். எக்ஸ் பார்ட்டே (ex-parte application) எனப்படும் ஒருசார்பு வழக்காக (எதிர்தரப்புக்கு தெரிவிக்காமல்) இந்த வழக்கு விசாரிக்கப்பட மனு செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

மலேசிய கினி ஊடகத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையின் முடிவில் பதிவிடப்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது

சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண்

“தலைமை நீதிபதி அனைத்து நீதிமன்றங்களும் ஜூலை 1 முதல் முழுமையாக செயல்பட உத்தரவிட்டுள்ளார்” என்ற ஒரு செய்தியை கடந்த ஜூன் 9ஆம் தேதி மலேசியாகினி வெளியிட்டது. அந்த செய்திக்கு ஐந்து வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துகளில் நீதித் துறை தவறுகள் இழைத்ததாகவும், ஊழல்களில் ஈடுபடுவதாகவும் தொனிக்கும் வகையில் அமைந்திருந்தன என சட்டத் துறை தலைவர் சமர்ப்பித்திருக்கும் சத்தியப் பிரமாணம் தெரிவித்தது.

நீதித் துறை நேர்மையையும் நீதிமன்ற நீதி பரிபாலனத்தையும் முறையாகக் கையாள்வது இல்லை என்றும் அந்த வாசகர் கருத்துகள் தெரிவித்ததாக சட்டத் துறை தலைவர் தனது சத்தியப் பிரமாணத்தில் தெரிவித்தார்.

நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வண்ணமும் நீதிபரிபாலன நிர்வாகத்தை குறை கூறும் வண்ணமும் இந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன என்றும் சட்டத்துறை தலைவர் இந்த வழக்கில் சமர்ப்பித்த சத்திய பிரமாணத்தில் தெரிவித்திருக்கிறார்.

நீதித்துறைக்கு எதிரான இந்த கருத்துகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் தவறு இழைத்ததாகவும், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாகவும் மலேசியா கினி மீதான வழக்கு மனுவில் சட்டத் துறைத் தலைவர் குறிப்பிட்டார்.

இன்று செவ்வாய்க்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமை அலுவலகத்தின் அதிகாரிகள் மலேசியாகினியின் முதன் ஆசிரியர் ஸ்டீவன் கான்’னிடம் இருந்து இந்த விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த வழக்கு தொடர்பு பல்ஊடக சட்டம் 1998 மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் காவல் துறையினரால் விசாரிக்கப்படுகிறது என்றும் மலேசியாகினி தெரிவித்தது.

இது குறித்து கருத்துரைத்த மலேசியாகினி முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் கான்  காவல்துறையினரிடம் தாங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க இருப்பதாகவும் தங்களின் வழக்கறிஞர்களுடன் இதுகுறித்து கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு குறித்து செய்தி வெளியிட்டுள்ள மலேசியாகினி அந்த செய்திக்கு வாசகர்கள் கருத்துகள் எதுவும் இடம் பெறாது என்றும் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் வழங்கிய ஆலோசனையின்பேரில் அந்த செய்திக்கு மட்டும் வாசகர் கருத்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மலேசியாகினி தெரிவித்தது.