Home One Line P2 ஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது

ஹாங்காங் மீதான சீனாவின் சர்ச்சைக்குரிய சட்டம் நிறைவேறியது

717
0
SHARE
Ad

பெய்ஜிங் – புதிய பாதுகாப்பு சட்டம் ஒன்றின் மூலம் ஹாங்காங் தீவை மேலும் கடுமையான அழுத்தங்களோடு ஆட்சி செய்ய முனைந்திருக்கிறது சீன அரசாங்கம். அந்தச் சட்டம் தற்போது அதிகாரபூர்வமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சீன அதிபர் ஜீ ஜின் பிங் இந்த சட்டத்தை அமுலாக்கும் ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ஹாங்காங்கிற்கு இதுவரை வழங்கி வந்த சிறப்பு வணிக சலுகைகளை மீட்டுக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

இதுபோன்ற சிறப்பு சலுகைகள்தான் ஹாங்காங் இதுநாள்வரையில் அனைத்துல வாணிப மையமாக உருவெடுக்க அடிப்படைக் காரணங்களாக அமைந்தன.

#TamilSchoolmychoice

புதன்கிழமை (ஜூலை 1) முதல் சர்ச்சைக்குரிய அந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த நாள் ஹாங்காங் சீனா வசம் திரும்பவும் ஒப்படைக்கப்பட்ட நாளின் 23-வது ஆண்டு நிறைவு நாளாகும்.

இந்த சட்டம் அமுலாக்கத்திற்கு வந்தாலும் சட்டத்தின் விரிவான அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த சட்டம் குறித்து ஆழ்ந்த கவனம் கொண்டிருக்கிறோம் என பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் தெரிவித்திருக்கிறார். ஹாங்காங்கை ஒப்படைக்கும் பிரிட்டன்-சீனா கூட்டு ஒப்பந்தத்திற்கு முரணான வகையில் இந்தப் புதிய பாதுகாப்பு சட்டம் இருக்கிறதா என்பதைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாகவும் போரிஸ் ஜோன்சன் கூறினார்.

இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால், தங்களின் முன்னாள் காலனி என்ற முறையில் ஹாங்காங் மக்களுக்கு பிரிட்டனில் நிரந்தர வசிப்பிடத் தகுதியை வழங்க தாங்கள் யோசித்து வருவதாகவும் ஏற்கனவே பிரிட்டன் அறிவித்திருந்தது.

பிரிட்டன் இவ்வாறு செய்தால் எங்களின் கடுமையான பதில் நடவடிக்கையை எதிர்நோக்க நேரிடும் எனவும் சீனா எச்சரித்திருந்தது.

நாளை புதன்கிழமை ஹாங்காங் முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக காவல் துறை தடை விதிக்கிறது.

எனினும் ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக நடைபெறும் என போராட்டவாதிகள் அறிவித்தனர்.