Home One Line P2 ஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்!

ஏர் ஆசியா : 1 பில்லியன் ரிங்கிட் கடன் வழங்கும் வங்கிகள்!

709
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கொவிட்-19 பாதிப்புகளால் கடும் நிதிப் பற்றாக்குறையையும், வணிக ரீதியான சவால்களையும் எதிர்நோக்கியிருக்கும் ஏர் ஆசியா நிறுவனத்திற்கு 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன்களை வழங்க வங்கிகள் முன்வந்திருக்கின்றன.

ஏர் ஆசியா தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கோலாலம்பூர் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏர் ஆசியா, நிதிச் சிக்கலினால் பிஎன் 17 என்ற நடைமுறை வரையறைக்குள் சிக்கியிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியிடப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்நிலையில் போதுமான ரொக்கக் கையிருப்பைக் கொண்டிருக்கவும், தடையின்றி விமானச் சேவைகளைத் தொடரவும் சில வங்கிகள் 1 பில்லியன் ரிங்கிட் வரை கடன் வழங்கி ஆதரவுக் கரம் நீட்ட முன்வந்திருக்கின்றன என்றார் டோனி பெர்னாண்டஸ். இந்தக் கடன்களில் ஒரு பகுதிக்கு மலேசிய அரசாங்கம் தனது பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் உத்தரவாதம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மலேசியா தவிர்த்து பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா ஆகிய நாடுகளில் இயங்கும் ஏர் ஆசியா நிறுவனங்களும் அந்தந்த நாடுகளின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களில் பங்கு பெறும் என்றும் இதற்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாகவும் டோனி பெர்னாண்டஸ் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக விமானச் சேவைகள் முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தின் தங்களின் ஏர் ஆசியா நிறுவனம் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டதாகவும் அதன் வழி தங்களின் ரொக்கச் செலவினங்களில் 50 விழுக்காடு வரை குறைக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் டோனி பெர்னாண்டஸ் தனது அறிக்கையில் கூறினார்.

தற்காலிகமாக சம்பள விகிதங்களை 15 முதல் 75 விழுக்காடு வரை குறைத்துக் கொள்வதற்கும் தாங்கள் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் கடும் சவால்மிக்க காலமாக இருந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக அனைத்துலக அளவில் விமான சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு சேவைகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நடவடிக்கைகளும் மீட்சி பெற்று வருகின்றன. கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையும் குறைந்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து நாங்களும் கட்டம் கட்டமாக மீட்சி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” எனவும் டோனி பெர்னாண்டஸ் தனதறிக்கையில் குறிப்பிட்டார்.

ஒரே நாளில் 75 ஆயிரம் இருக்கைகள் விற்பனை

“கடந்த ஜூலை 7-ஆம் தேதி ஒரே நாளில் 75 ஆயிரம் விமான சேவை இருக்கைகளை விற்பனை செய்து சாதனை படைத்தோம். முடக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் ஒரே நாளில் நாங்கள் மேற்கொண்ட மிக அதிகமான விற்பனை எண்ணிக்கை இதுவாகும். மலேசியா, தாய்லாந்துக்கென வரையறையற்ற முன் அனுமதிச் சீட்டுகள் 200,000-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்றிருக்கிறோம்” எனவும் டோனி பெர்னாண்டஸ் தனதறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், கோலாலம்பூர் பங்குச்சந்தை பின்பற்றும் பிஎன் 17 என்ற (Practice Note 17 – PN17) நடைமுறை உத்தரவு வரையறைக்குள் ஏர் ஆசியா இடம் பெற்றிருக்கிறது என அதன் நிர்வாகம் நேற்று புதன்கிழமை (ஜூலை 8) அறிவித்தது.

அதைத் தொடர்ந்தே டோனி பெர்னாண்டசின் இன்றைய அறிக்கை வெளியாகி இருக்கிறது.

கொவிட்-19 பாதிப்புகளால் அனைத்து விமான நிறுவனங்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டு தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன.

இந்நிலையில்தான் பிஎன் 17 நடைமுறை உத்தரவு நிலைமைக்கு தாங்கள் உட்படுத்தப்படிருப்பதாக ஏர் ஆசியா அறிக்கை ஒன்றின் வழி அறிவித்திருக்கிறது.

ஆனால், அரசாங்கமும், கோலாலம்பூர் பங்குச் சந்தையும் நிறுவனங்களுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள், மீட்சி, நிவாரண நடவடிக்கைகள் காரணமாக அதிகாரபூர்வமாக அந்த நிலைமைக்கு வர தங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகலாம் என்றும் ஏர் ஆசியா அறிவித்தது.

தங்களின் வெளிக் கணக்காய்வாளர்கள் எர்னஸ் அண்ட் யங் (Messrs Ernst & Young PLT) 31 டிசம்பர் 2019 வரையிலான நிதியாண்டுக்கென வழங்கியிருக்கும் கணக்குத் தணிக்கையறிக்கை மீதான ஆலோசனை காரணமாகவே தாங்கள் பிஎன்17 வரையறைக்குள் உட்படுத்தப்பட்டிருப்பதாக ஏர் ஆசியா தெரிவித்தது.

அடுத்த 12 மாதங்களுக்குள் நிலைமையைச் சரிசெய்ய, அரசாங்க, கோலாலம்பூர் பங்குச் சந்தை நடைமுறைப்படி தங்களுக்கு கால அவகாசம் இருப்பதாகவும் ஏர் ஆசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டது.