Home One Line P1 கடலடி சுரங்கப்பாதை: அபிப் பகார்டின் விசாரிக்கப்பட்டார்

கடலடி சுரங்கப்பாதை: அபிப் பகார்டின் விசாரிக்கப்பட்டார்

400
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: செபெராங் ஜெயா மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அபிப் பகார்டின் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் காணப்பட்டார்.

இந்த வருகையானது பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்ட விசாரணைக்கு தொடர்புடையது என்று நம்பப்படுகிறது.

மதியம் 2 மணியளவில் எம்ஏசிசி தலைமையகத்திற்குள் அவர் நுழைவது தெரிவிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

2013 முதல் மார்ச் 2020 வரையிலான காலப்பகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்ததால அவர் அழைக்கப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை இந்த வழக்கு தொடர்பாக தம்மை விசாரிக்க இருப்பதாக, தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக அபிப் கூறினார்.

“என்ன கேள்விகள் கேட்கப்படும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

எம்ஏசிசி இதுவரை அவரிடமிருந்து எந்த ஆவணங்களையும் கேட்கவில்லை.

டாக்டர் அபிப் மார்ச் 4 முதல் விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில், ஊரக வளர்ச்சி மற்றும் சுகாதார பொறுப்பிலிருந்து பதவி விலகினார்.

முன்னதாக, பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மற்றும் பல மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எம்ஏசிசிக்கு இத்திட்டம் குறித்து சாட்சியமளிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனிடையே, இந்த விவகாரம் சம்பந்தமாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் ஜூன் 30 அன்று ​ பினாங்கு துறைமுக முன்னாள் ஆணையத் தலைவர் ஜெப்ரி செவ் கைது செய்யப்பட்டார். பின்பு அவர் நான்கு நாட்களுக்குப் பிறகு விடிவிக்கப்பட்டார்.

சர்ச்சைக்குரிய 6.3 பில்லியன் ரிங்கிட் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டம் குறித்த புதிய தடயங்களைத் தொடர்ந்து, மீண்டும் ஊழல் தடுப்பு ஆணையம் இது தொடர்பாக ஆராயத் தொடங்கியது.

2018- இல் பிபிசி தலைவராக வருவதற்கு முன்பு, 52 வயதான செவ், உற்பத்தி, தொழில்கள் மற்றும் முதலீடுகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கின் சிறப்பு உதவியாளராக இருந்தார்.

இதற்கிடையில், மூன்று எம்ஏசிசி குழுக்கள் கடந்த சில நாட்களில் கடலடி சுரங்கப்பாதை திட்டம் தொடர்பாக பல நிறுவனங்களில் சோதனைகளை நடத்தியது.

மே மாதத்தில், பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஆறு விசாரணை ஆவணங்களைத் திறந்திருப்பதை எம்ஏசிசி உறுதிப்படுத்தியது.

முதல் விசாரணை 2017 ஜூலை மாதம் தொடக்கப்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் மேலும் ஐந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன என்றும் எம்ஏசிசி தெரிவித்தது.

மொத்தம் ஐந்து விசாரணை ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக மூன்று விசாரணை ஆவணங்கள் எம்ஏசிசிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அது தெரிவித்தது.

கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஈடுபட்டதற்காக 2018- ஆம் ஆண்டில், எம்ஏசிசி, ஈவின் பெர்ஹாட் நிர்வாக இயக்குனர் டத்தோ ஈவ் ஸ்வீ கெங் மற்றும் கொன்சோர்தியம் ஜெனித் கன்ஸ்ட்ரக்ஷன் செண்டெரியான் பெர்ஹாட் மூத்த நிர்வாக இயக்குனர் டத்தோ ஷாருல் அகமட் முகமட் சுல்கிப்லி ஆகியோரைத் தடுத்து வைத்தது.

அந்நேரத்தில் எம்ஏசிசி நான்கு மாநில அரசு நிறுவனங்களின் அலுவலகங்களை சோதனை செய்தது. பினாங்கு பொதுப்பணித் துறை, பினாங்கு மாநில செயலாளர், நிலங்கள் மற்றும் சுரங்கங்களின் பினாங்கு அலுவலகம், மற்றும் பினாங்கு மதிப்பீடு மற்றும் சொத்து சேவைகள் துறை மற்றும் மூன்று சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டன.