Home One Line P1 மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும்

மகாதீர் பதவி விலகாமல் இருந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும்

485
0
SHARE
Ad

கங்கார்: முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் தாம் பதவி விலகியது சாதாரண விவகாரம் மட்டுமே என்று கூறியது விமர்சனத்திற்கு ஆளானது.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு இது முக்கியக் காரணம் அல்ல என்று அவர் அறிக்கை வெளியிட்டதை அடுத்து, கங்கார் நாடாளுமன்ற உறுப்பினர் நூர் அமீன் அகமட் துன் மகாதீரை சாடியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் மகாதீர் பிரதமர் பதவியில் இருந்து விலகவில்லை என்றால், இன்று நிலைமை வேறு மாதிரியாக இருக்கும் என்று பிகேஆர் தலைவருவமான அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் (மகாதீர்) பிரதமராக இருக்கும்போதே உண்மையான நிலைமையைத் தெரிவிக்கவும் விவாதிக்கவும் நம்பிக்கைக் கூட்டணி அவசரக் கூட்டத்தை அழைத்திருந்தால், நிலைமை வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்று அவர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

“நாம் இன்னும் அதிக ஆதரவைப் பெற்றிருக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

“இருப்பினும், நீங்கள் (மகாதீர்) விவாதிக்கவில்லை. ” என்று அவர் கூறினார்.

அமீன் அகமட்டின் அறிக்கையை மகாதீரின் முன்னாள் பத்திரிகை செயலாளர் எண்டி ஷாஸ்லி அக்பர் மறுத்தார்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், பிகேஆர் ஆலோசகர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருடன் பதவி விலகுவதற்கு முன்னதாக மகாதீர் ஏற்கனவே விவாதித்ததாக எண்டி விளக்கினார்.

எவ்வாறாயினும், நம்பிக்கைக் கூட்டணி கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்கு முன்பே மகாதீர் பதவி விலகியதாக அமீன் அகமட் வலியுறுத்தினார்.

முன்னதாக, தனது பிரதமர் பதவி விலகல் குறித்து தனது வலைத்தளத்தில் துன் மகாதீர் பதிவிட்டிருந்தார். தமது பதவி விலகலுக்கு நஜிப்தான் முக்கியக் காரணம் என்றத் தொனியில் அவர் விளக்கங்களை அளித்திருந்தார்.

“14-வது பொதுத் தேர்தலில் தோல்வியடைந்ததும், தான் புரிந்த குற்றங்களுக்காக நிச்சயம் சிறைக்குச் செல்வேன் என்பதை நஜிப் அப்துல் ரசாக் உணர்ந்தார். எனவே, உடனடியாக பாஸ் இடையிலான மலாய்-முஸ்லீம் கூட்டணி அரசாங்கம் என்ற நிலைப்பாட்டைப் பரிந்துரைத்தார்.
எனினும் அவர்களுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆதரவு தேவைப்பட்டது.” என்று அவர் பதிவிட்டிருந்தார்.

ஆளும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் ஜசெகவின் ஆதிக்கத்தில் நடைபெறுகிறது என்றும், ஜசெகவால் மலாய்க்காரர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற பிரச்சாரத்தை நஜிப் தொடங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“பாஸ், அம்னோ, பெர்சாத்து இணைந்த கூட்டணிக்கு பிரதமராக இருக்க நான் மறுத்துவிட்டேன். அதற்குக் காரணம் இதன் மூலம் நான் அம்னோவுடனும், நஜிப்புடனும் இணைந்து வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். 14-வது பொதுத் தேர்தலில் நான் யாரைக் கண்டனம் செய்தேனோ, யாரைத் தோற்கடித்தேனோ அவர்களுடனேயே மீண்டும் இணைய நான் ஒப்புக் கொள்ளவில்லை.

“அப்படிச் செய்வதன் மூலம் அம்னோவுக்கு மீண்டும் உயிர்கொடுத்து அதனை மீண்டும் அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கொண்டுவருவதற்குத்தான் நான் பாடுபட்டவனாகி இருப்பேன். நம்பிக்கைக் கூட்டணியின் மற்ற உறுப்பியக் கட்சிகளுக்கு நான் வழங்கிய வாக்குறுதிகளை நான் மீறியவனாகியிருப்பேன்.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, தம்மைப் பற்றி துன் மகாதீர் குறைக் கூறுவதில் எந்தவொரு உண்மையும் இல்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார்.

துன் மகாதிர் முகமட் பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கு உண்மையான காரணத்தைக் கூறவில்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் பதவி விலகிய டாக்டர் மகாதீருக்கு வேறு காரணங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

அது அம்னோ, தம்மைக் காரணமாகக் கொண்டதல்ல என்றும் நஜிப் முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

டாக்டர் மகாதீர், பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

“அன்வார் இப்ராகிம் பிரதமராக இருப்பதை அவர் விரும்பவில்லை. அவர் ஜசெக, பிகேஆரால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. 15- வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து, நம்பிக்கைக் கூட்டணி மோசமாக தோல்வியடைவார்கள் என்று அவர் கவலைப்பட்டார் ” என்று நஜிப் முகநூலில் பதிவிட்டுள்ளார்.